இந்தியா

குண்டுப் பெண்ணை கலாய்த்த நெட்டிசன்கள்: கூலாக பதில் தந்த தம்பதி

குண்டுப் பெண்ணை கலாய்த்த நெட்டிசன்கள்: கூலாக பதில் தந்த தம்பதி

webteam

தனது மனைவியின் உடல் பருமன் குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு கேரள கணவர் தக்க பதில் அளித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த தம்பதியினர் சுஜித் மற்றும் சுவேதா. இவர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளனர். அதற்கு காரணம் இருவரும் சேர்ந்து வெளியிட்ட 58 விநாடிகள் வீடியோதான். அந்த வீடியோவில் சுஜித் உருக்கமான மற்றும் தன்னம்பிக்கைக் கொண்ட ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். முன்னதாக சுஜித்-சுவேதா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் தங்கள் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர். அத்துடன் சுஜித் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தங்கள் தேன்நிலவு கொண்டாட்டத்தை பதிவு செய்திருந்தார். அதில் அவர்கள் தங்கியிருந்த சொகுசு விடுதி, தேயிலை தோட்டம், உணவு உண்ட முறை உள்ளிட்ட சந்தோச தருணங்களை பகிர்ந்திருந்தார்.

அந்தக் காட்சிகள் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு பிடித்த வண்ணம் அமைந்திருந்தது. இந்த வீடியோவை அவர் ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்த நிலையில், அவர்கள் பதிவுகளை சிலர் விமர்சித்தனர். குறிப்பாக சுவேதாவின் உடல் பருமனை குறிப்பிட்டு விமர்சித்திருந்தனர். இந்நிலையில் தான் அதற்கு பதிலளிக்கும் வகையில் சுஜித்-சுவேதா வெளியிட்ட வீடியோ வைரலாகி, அவர்களை பிரபலப்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் பேசியுள்ள சுஜித், “உடல் பருமன் என்பதில் ஒன்றுமில்லை. இவளுக்குள் ஒரு சிறிய இதயம் உள்ளது. அது மிகவும் அழகானது. உடல் பருமனாக இல்லாதவர்கள் தான் வாழவேண்டும் என்றில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். எனக்கு உடல் பருமனாக இருப்பது தான் பிடிக்கும். மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு உடல்பருமன், வெளிப்புற அழகு இதெல்லாம் முக்கியமில்லை. நல்ல மனது தான் முக்கியம். அது இவளிடம் இருக்கிறது” என்று உருக்கமாகவும், நம்பிக்கையுடனும் தெரிவித்துள்ளார். 

சுவேதா பேசும் போது, “என்னைப்பற்றி பலர் தெரிவித்துள்ள விமர்சனங்களை நினைத்து நான் கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. அதை நான் ஊக்கப்படுத்தும் செயலாக எடுத்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.