இந்தியா

“நம்முடைய ராணுவ வீரர்கள் தினந்தோறும் சுடப்படுகிறார்கள்” சித்துவை விளாசிய பஞ்சாப் முதல்வர்

“நம்முடைய ராணுவ வீரர்கள் தினந்தோறும் சுடப்படுகிறார்கள்” சித்துவை விளாசிய பஞ்சாப் முதல்வர்

rajakannan

பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவை பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான கட்சி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை பெறவில்லை. மற்ற கட்சிகளுடன் உதவியுடன் இம்ரான் கான் ஆட்சியமைத்துள்ளார். பாகிஸ் தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமருக்கான வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து பாகிஸ்தானின் 22 வது பிரதமராக இம்ரான் கான் கடந்த சனிக்கிழமை பதவியேற்றார். 

இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில், இம்ரான் கானுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இந்தியாவில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில அமைச்சருமான சித்து கலந்து கொண்டார். 

ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜனாதிபதி மசூத் கான் அருகில் அமர வைக்கப்பட்டார். அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி கமார் ஜாவேத் பஜ்வாவும் அவரும் கட்டித் தழுவிக்கொண்டனர். ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் முன் சித்து கூறும்போது, ‘ இம்ரான் கான் போன்றவர்கள் வரலாற்றை உருவாக்குகின்றனர். இந்த அழைப்பின் மூலம், அவர்கள் என்னை கவுரவப்படுத்தி உள்ளனர். உறவுகளை கட்டியெழுப்பும் மக்கள் மதிக்கப்படுகிறார்கள், அதை உடைப்பவர்கள் அவமதிக்கப்படுகிறார்கள். நான் உறவுகளை மதிப்பவன். இது புதிய விடியல்’ என்றார்.

இந்நிலையில், ஒவ்வொரு நாளும் நம்முடைய ராணுவ வீரர்கள் சுடப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டித் தழுவுவதா என்று சித்துவை பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு நாளும் நம்முடைய ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய ராணுவ தளபதியை கட்டித் தழுவதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நம்முடைய ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப்பில் இருந்து ஒரு மேஜர் மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

பஞ்சாப் மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான சம்பிட் பத்ரா கூறுகையில், “சித்து சாதாரண மனிதர் அல்ல. அவர் பஞ்சாப் அரசில் அமைச்சராக உள்ளார். இந்தியர்கள் அனைவரும் இந்த விஷயத்தை முக்கியமானதாக பார்க்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சித்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.