இந்தியா

’சாப்பாடு தரலை, டார்ச்சர் பண்றாங்க..’: லாலு பிரசாத் மருமகள் புகார்

webteam

தனக்கு சாப்பாடு கூட தராமல் கொடுமைப்படுத்துவதாக, லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவின் மனைவி ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவுக்கு தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் என 2 மகன்கள். ஏழு மகள்கள். மகன்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ், உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தேஜ்பிரதாப் யாதவுக்கும், பிகார் எம்எல்ஏ சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா  ராய்க்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆன நிலையில் விவகாரத்து கோரி, தேஜ் பிரதாப் யாதவ் வழக்கு
தொடர்ந்துள்ளார். மனைவிக்கும் தனக்கும் மனப் பொருத்தம் இல்லை என்று அவர் காரணம் கூறியுள்ளார். சொந்த வீட்டில் இருந்தும் வெளியேறிவிட்டார். ஆனால், ஐஸ்வர்யா ராய், லாலு பிரசாத் வீட்டிலேயே வசித்துவருகிறார். இந்நிலையில், அவர்கள் வீட்டில் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஐஸ்வர்யா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, ‘’எனக்கும், என் கணவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது என் கணவரின் சகோதரி, மிசா பாரதிதான். விவாகரத்து வழக்கு நிலுவையில்தான் இருக்கிறது. ஆனால், விவாகரத்து செய்துவிட்டது போலவே என்னை அவர் நடத்துகிறார். 3 மாதங்களாக என்னை கொடுமைப்படுத்துகிறார். எனக்குச் சாப்பாடு கூட தருவதில்லை. எங்கள் வீட்டில் இருந்தே எனக்கு சாப்பாடு வருகிறது. கிச்சனுக்குள் செல்ல என்னை அனுமதிப்பதில்லை. என் மாமியாரின் வேலைக்காரர், கதவை அடைத்துவிட்டு சாவியை தர முடியாது என்று முரட்டுத்தனமாக மறுக்கிறார். என்னை வெளியே தள்ளினர். என்
கணவருக்கும் அவர் சகோதரருக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதும் மிசா பாரதிதான். என் மாமனார் லாலு பிரசாத் யாதவ் துரதிர்ஷ்டவசமாக இங்கு இல்லை. அவரால் மட்டுமே எங்கள் பிரச்னையை தீர்க்க முடியும்’’ என்றார். 

ஆனால், ஐஸ்வர்யா ராயின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மிசா பாரதி, ‘ஒவ்வொரு கணவன் மனைவி பிரச்னையிலும் கணவரின் சகோதரிகள் இழுக்கப்படுவது சகஜம்தான். அவர்கள் பிரச்னையில் நான் தேவையில்லாமல் இழுக்கப்படுகிறேன். கடந்த சில மாதங்களாக மூன்று நான்கு முறை மட்டுமே பாட்னாவுக்கு சென்றிருக்கிறேன். அதுவும் வழக்கு விஷயங்க ளுக்காக நீதிமன்றத்துக்குத்தான் சென்றுள்ளேன். அதனால் என் மீதான இந்த புகார், உண்மைக்குப் புறம்பானது’’ என்று தெரிவித்துள்ளார்.