இந்தியா

"பிரதமரின் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும்": கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

Veeramani

பிரதமர் நரேந்திர மோடியின் அனுமதி பெற்று விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய முதலமைச்சராக பதவியேற்ற பின், தலைமைச் செயலகத்துக்குச் சென்ற அவரை, அதிகாரிகளும் அமைச்சர்களும் பூச்செண்டுகள் கொடுத்து வரவேற்று வாழ்த்தினர். அங்கு நடைபெற்ற பூஜையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பங்கேற்றார். பின்னர் முதலமைச்சர் அறையில் உள்ள இருக்கையில் பசவராஜ் பொம்மையை அமைச்சர்களும் அதிகாரிகளும் அமர வைத்தனர்.

இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் உறுதியாக இருப்பதாகக் கூறினார். பிரதமரை சந்தித்து உரிய அனுமதி பெற்று விரைவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று தெரிவித்தார்.