இந்தியா

நகைச்சுவை என்ற பெயரில் சாதிவெறி நாடகம்? பெங்களூரு நாடக்குழு மீது காவல்துறையில் புகார்!

webteam

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்யோகா - ஜெயின் பல்கலைக்கழக விழாவில் (Youth Fest) நடந்த ஒரு மேடை நாடகத்தை எதிர்த்து, அதில் பங்கேற்ற பார்வையாளர்களே ஆன்லைன் மூலம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அந்த நாடகத்தை மேடையேற்றியவர்கள் மற்றும் மேடையேற்ற அனுமதித்தவர்கள் மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பெங்களூரு சாம்யோகா - ஜெயின் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய விழாவில், `Mad Ads’ என்ற பெயரில் `The Delroys Boys’ என்ற குழுவினர் `நகைச்சுவை மேடை நாடகம்’ என்ற கேட்டகிரியில் ஒரு குழு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். 

அந்த நாடகம் முழுக்க முழுக்க சாதிவெறியையும், சாதியை அடிப்படையாக வைத்து வழங்கப்படும் இடஒதுக்கீட்டையும், சாதிப் பிரிவுகளிலுள்ள தாழ்த்தப்பட்டவர்களை தாக்குதலுக்கு ஆட்படுத்துவதுமாக இருந்துள்ளது. இதில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், தேர்வாளர்களேவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த நாடகக்குழு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென சொல்லப்படுகிறது. இதனால் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கச் சென்றவர்களே, அந்த நாடகத்தில் நடித்தவர்களும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜெயின் பல்கலைக்கழகமும் மன்னிப்பு கோர வேண்டும் என்ற எதிர்ப்புக் குரலை வைத்துள்ளனர்.

`Justice for Equality: Stand Against Casteism in College Festivals’ (சமத்துவத்திற்கான நீதி: கல்லூரி விழாக்களில் சாதிவெறிக்கு எதிராக நிற்போம்) என்ற அடையாளத்தின் கீழ் எதிர்ப்பு குரல்களுக்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. bit.ly/JainApologise என்ற இணையதளம் மூலமாக, இந்த எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் செயல்படுகிறது. எதிர்ப்பை பதிவுசெய்தவர்கள் யாரும் தங்களின் அடையாளங்களை தற்போதுவரை வெளிக்காட்டவில்லை. தங்கள் தரப்பில் அவர்கள் “நாடகத்தை நடத்தியவர்கள், அதற்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் என எல்லோரும் தங்கள் செயல்களுக்கு பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். சாதிவெறிக்கு எதிரான நிலைப்பாட்டை காட்ட நினைப்பவர்கள் அனைவரும், இந்த இணையதளம் மூலமாக மனுவில் கையெழுத்திடுங்கள்” என பொதுமக்களிடமும் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த குறிப்பிட்ட நாடகத்தின் சில பகுதிகளை அவர்கள் இன்ஸ்டாவில் ரீல்ஸாகவும் வெளியிட்டுள்ளனர். அதன்படி, வீடியோவில் சட்டமேதை `பி.ஆர்.அம்பேத்கர்’ பெயரை, அந்த நாடகக்குழுவின் `பீர் அம்பேத்கர்’ என மாற்றிப் பேசியதாக தெரிகிறது. மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஓர் ஆண், உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணை எப்படி எல்லாம் காதலிக்க முற்படுகிறான் என்பது போலான பல உணர்வற்ற கருத்துகளைப் பேசியும், மேலும் “த-லிட் (D-Lit) ஆக ஏற்கெனவே இருக்கும் நீங்கள், ஏன் தலித்தாக (Dalit) மாற வேண்டும்” என்ற வசனங்களைப் பேசியிருப்பதுடன், மிகக் கேவலமாக நகைச்சுவை செய்திருப்பதாகப் பார்வையாளராக சென்ற எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாடகத்தை சம்பந்தப்பட்ட பல்கலைகழகம் மற்றும் கல்லூரி அதிகாரிகளிடம் பலமுறை அரங்கேற்றி காட்டிய பிறகுதான் அவர்கள் மேடையேறியதாகவும், இவர்கள் இதே நாடகத்தை பிப்ரவரி 5ஆம் தேதி வேறொரு கல்லூரியிலும் நடத்தியதாகவும், இதுவரை இவர்கள் மொத்தமாய் 3 இடங்களில் இந்த நாடகத்தை நடத்தியிருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விவகாரம் இணையதளத்தில் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி, மகாராஷ்டிரா காவல்துறை கண்காணிப்பாளரிடம், நாடகத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்குமாறு புகார் தெரிவித்து, அதை எப்ஐஆர்-ஆக மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்தப் புகாரை சட்டக்கல்லூரி மாணவர் அக்‌ஷய் என்பவர் கொடுத்திருக்கிறார். 

அக்‌ஷய், இப்புகாரை SC/ST சட்டத்தின் பிரிவு X(3), அத்துடன் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153, 153A, 295, 499, 500, 503, 504, 506 மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.