ஹெல்த்

உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்கள் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்க!

Sinekadhara

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், தாய்மார்களை தாய்ப்பால் கொடுக்க ஊக்குவிக்கும் வகையிலும் இது கொண்டாடப்படுகிறது. குழந்தை உடல் மற்றும் மன வளர்ச்சியடைய பிறந்தது முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம்.

குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதச்சத்துமிக்க சமச்சீரான சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். தாய் சாப்பிடும் உணவுகளிலிருந்துதான் தாய்ப்பால் வழியாக குழந்தைக்கு சத்துகள் போய்சேருகின்றன. குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் என்னென்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் போன்றே, என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும்.

1. ஆல்கஹால்: பாலூட்டும் தாய்மார்கள் ஆல்கஹால் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது தாய்பாலிலும் கலக்கக்கூடும். குழந்தைக்கு பாலூட்டும்போது ஆல்கஹாலையும் சேர்த்து ஊட்ட நேரிடும்.

2. காபி: காபி மற்றும் கஃபைன் கலந்த மற்ற பானங்களை அருந்தும்போது அது தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் தூக்க சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் குழந்தையின் உடலில் அதிக காபி சேர்ந்தால் அது குழந்தைக்கு ஒருவித எரிச்சலை உண்டுபண்ணும்.

3. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக சர்க்கரை, எண்ணெய், கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் அடங்கியிருக்கும். இது தாய்ப்பால் வழியாக குழந்தையின் உடலுக்கும் செல்லும். இது ஆரோக்கியமற்ற உணவுகளை நாட குழந்தையையும் தூண்டும்.

4. கடல் உணவுகள்: கடல் உணவுகளில் மெர்குரி அதிகம் இருப்பதால் இது குழந்தையின் வளர்ச்சியை தாமதப்படுத்தலாம். மேலும், அதீத மெர்குரி உணவுகள் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம்.

5. எனர்ஜி டிரிங்க்ஸ்: எனர்ஜி பானங்களில் கஃபைன் மற்றும் பிற வைட்டமின்களும், மூலிகைகளும் அடங்கியிருக்கும். இது குழந்தைகளின் நலனுக்கு நல்லதல்ல; எனவே பாலூட்டும் தாய்மார்கள் இவற்றை தவிர்க்கலாம்.


உலக தாய்ப்பால் வாரம் கட்டுரைகள்: