ஹெல்த்

பல முறை பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்யால் புற்று நோய், இதய பாதிப்பு? - ஒரு பார்வை

நிவேதா ஜெகராஜா

ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால், பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுபற்றி இங்கு விரிவாக கானலாம்.

இந்தியாவில் சமையல் எண்ணெய் நுகர்வு ஆண்டுக்கு சுமார் 22.5 மில்லியன் மெட்ரிக் டன் என சொல்லப்படுகிறது. இப்படியிருக்க, பயன்படுத்திய சமையல் எண்ணெயுடன் புதிய எண்ணெயைக் கலப்படம் செய்து பயன்படுத்துவது பெரிய சுகாதார ஆபத்து என்று கண்டறியப்பட்டுள்ளது.

வறுப்பதற்குப் பயன்படுத்தும் போது வெப்பநிலை அதிகரிப்பதால், எண்ணெய் சிதைவுக்கு உட்படுகிறது. இதனால் எண்ணெயின் ஊட்டச்சத்து உள்ளிட்ட பண்புகள் பாதிக்கப்படுகின்றன.

சமையல் எண்ணெயை, ஒரு முறைக்கு மேல் பயன்படுத்துவதால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இருப்பினும், உணவகங்கள், அனைத்து வகை விடுதிகள், கல்லுாரி கேன்டீன், இனிப்பகங்கள், ஃபாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுக் கடைகள் என அனைத்திலும், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அங்கு பல முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய், மறுபடியும் சிறு கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் புற்று நோய், இதய பாதிப்பு, நெஞ்சு எரிச்சல், உயர் இரத்த அழுத்தம், பெருந்தமனி தடிப்பு, அல்சைமர், கொழுப்பு மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த நோய்கள் வராமல் இருக்க ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

இதுகுறித்து பயோடீசல் துறை ஆலோசகர் பா.சந்திரசேகர், உணவு பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த டாக்டர். ஜெகதீஸ் சந்திர போஸ் ஆகியோர் நியூஸ் 360 நிகழ்ச்சியில் விரிவாகப் பேசியுள்ளனர்.