தினமும் காதில் இயர்ப்ளக் எனப்படும் செவிச்செருகியை வைத்து தூங்குபவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானதுதான். இரவு தூங்கும்போது குறட்டை, வாகனப் போக்குவரத்து போன்ற சத்தங்களை தவிர்க்க பலரும் காதில் 'இயர்ப்ளக்ஸ்' பயன்படுத்துகின்றனர். ஆனால், இதனை தொடர்ந்து தினமும் பயன்படுத்துவது, காதில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அதாவது, தொடர்ந்து இயர்ப்ளக் பயன்படுத்துவதால், காதுக்குள் இயற்கையாகச் சுரக்கும் மெழுகு வெளியேறுவதில் தடை ஏற்பட்டு, உள்ளேயே தங்கிவிடும் என்றும், இதனால் காது அடைப்பு அல்லது கேட்கும் திறன் மங்குதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கின்றனர். சரியாக சுத்தப்படுத்தப்படாத இயர்ப்ளக்கை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, அதில் உள்ள பாக்டீரியா காதுக்குள் சென்று காது தொற்றை ஏற்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர். அடிக்கடி காது தொற்றுக்கு உள்ளாகுபவர்கள், காதில் அரிப்பு அல்லது தோல் நோய் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இயர்பிளக்கை பயன்படுத்த வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.