ஹெல்த்

சத்தியமங்கலம்: டெங்குவால் பள்ளி மாணவர் உயிரிழப்பு; கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

நிவேதா ஜெகராஜா

சத்தியமங்கலம் நகராட்சியில் டெங்கு வேகமாக பரவி வருவதால் கொசு ஒழிப்பு நடவடிக்கையாக சாக்கடைகளில் கிருமி நாசனி மற்றும் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. அண்மையில் 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் டெங்கு நோயால் உயிரிழந்ததால் நகராட்சி சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுக்கவே குழந்தைகள் முதல் பெரியோர் வரை காய்ச்சலால் அவதிப்படுவதால் சாலை ஓரங்கள், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை கண்டறிந்து தடுப்பு கிருமிநாசனி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. வீதி வீதியாக குடியிருப்புகளில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் தொட்டிகளில் குளோரின் அளவும் சரிபார்க்கப்படுகிறது.

அரசு அலுவலகங்கள், வீடுகள், பள்ளிகள் அருகில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள இடங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் உள்ள இடங்களில் கொசுபுழு ஒழுப்பு கிருமி நாசனி தெளித்தும் புகை மருந்து அடிக்கும் பணிகளில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வணிக நிறுவனங்களிலும் தற்போது நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்படுகிறது. டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்படும் என்றும், நீண்ட நாள் பயன்பாடின்றி உள்ள பொருள்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.