ஹெல்த்

உணவுக்கு இடையிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கமுடையவரா? - அப்போ கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Sinekadhara

சாப்பிடும்போது பலரும் இடையிடையே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்திருப்பர். சிலர் உணவை அதிகமாக சாப்பிடக் கூடாது என்பதற்காக நிறைய தண்ணீர் குடிப்பதாகக் கூறுவர். ஆனால் உணவுக்கு இடையிடையே தண்ணீர் குடிப்பது சரியா என்றால் அது செரிமானத்தை தாமதப்படுத்தும் என்கிறனர் நிபுணர்கள். வாயிலிருந்து உணவு வயிற்றுக்குள் செல்லும்போதே செரிமானம் தொடங்க ஆரம்பிக்கிறது. உணவு வயிற்றுக்குள் சென்றவுடன் வயிற்றிலுள்ள நொதிகள் உணவை உடைக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் உணவு சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிப்பது இந்த செரிமான செயல்முறையை தடைசெய்கிறது.

உணவு சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிப்பது நல்லது என்றாலும், அதிகளவு குடிப்பது நல்லதல்ல. இது ஏப்பம், நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் போன்ற பல்வேறு கடுமையான செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை பல்வேறு ஆய்வுகள் விளக்கியுள்ளன.

உணவுக்கு இடையே தண்ணீர் குடிப்பதால் செரிமான செயல்முறையில் ஏற்படும் பிரச்னைகள் சிலவற்றை தெரிந்துகொள்ளலாம்.

நொதிகளுக்கு இடையே தண்ணீர் குறுக்கிடுகிறது: உணவுடன் தண்ணீர் சேர்த்து குடிப்பது, நொதிகளின் உதவியுடன் உணவை உடைக்க உதவுகிற வயிற்று அமிலத்தை நீர்த்துப்போகச் செய்கிறது. அதிக நீர் உள்ளே செல்வதால் இந்த நொதிகள் கழுவப்பட்டு, இரைப்பை குடல் பகுதி சரியாக செயல்படுவதை கடினமாக்குகிறது. உணவு சரியாக செரிக்காவிட்டால் வயிற்று வலி, ஏப்பம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

இன்சுலின் அளவு அதிகரிக்கும்: உணவுடன் தண்ணீர் சேர்த்து குடிப்பது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. இது உடலில் அதிக கொழுப்பு சேருவதை ஊக்குவிக்கிறது.

எடை அதிகரிப்பு: உணவுக்கு இடையிடையே தண்ணீர் குடிப்பது உடல் எடையை அதிகரிக்கும் என பலர் நம்புகின்றனர். செரிக்காத உணவுகள் உடலில் எடையாக மாறுகிறது என்பதே அதற்கு காரணம்.

உணவுக்கு இடையில் தண்ணீர் குடிப்பதை எப்படி கட்டுப்படுத்துவது?

குறைந்த உப்பு சுவை: குறைந்த அளவு உப்பு சுவையுள்ள உணவை எடுத்துக்கொண்டால் உணவுக்கு இடையிடையே தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. சோடியம் எப்போதும் தாகத்தை தூண்டக்கூடியது.

குறைந்த எண்ணெய் மற்றும் காரம்: உணவில் எப்போதும் காரமும் எண்ணெயும் குறிப்பிட்ட அளவிலேயே இருக்கவேண்டும். அது சுவைக்காக மட்டுமல்ல; ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தும் கூட. குறைந்த அளவில் எண்ணெய் மற்றும் காரம் சேர்த்துக்கொள்வதும் தாகத்தை தூண்டாது.

நன்றாக மென்று விழுங்கவேண்டும்: நாம் எவ்வளவு அதிகம் மென்று சாப்பிடுகிறோமோ அந்த அளவுக்கு செரிமானமும் வேகமாக நடக்கிறது. இதனால் அசிடிட்டி மற்றும் வயிறு உப்புதல் போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுகிறது.