ஹெல்த்

60% பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் இதய நோய்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

webteam

அறுபது சதவிகித பெண்கள், தங்கள் கர்ப்ப காலத்தில்தான் முதல்முறையாக இதய நோய் பற்றி அறிகிறார்கள் என்கிறது சென்னை மருத்துவக்கல்லூரியின் இதயவியல் துறை ஆய்வு.

2016 முதல் 2019 வரை சென்னை மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை 1005 கர்ப்பிணிகளிடம் ஆய்வு நடத்தியது. இவர்களில் ஐந்தில் மூன்று பேர், அதாவது 60 சதவிகிதம் பெண்கள் கர்ப்ப காலத்தில்தான் இதய நோயை உணர்கிறார்கள். இதயநோயுள்ள கர்ப்பிணிகளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது ஆய்வு. இதய நோய் இல்லாத கர்ப்பிணிகளுடன் ஒப்பிடுகையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளின் இறப்பு 35 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு எச்சரிக்கிறது. 

கர்ப்ப காலத்தில் இதய நோய்களை சிறந்த முறையில் நிர்வகிக்க இதயவியல்மற்றும் மகப்பேறு சிகிச்சை நிபுணர்களின் குழு சிகிச்சை தேவையாகிறது என்பதையும், இதய
நோய் உள்ள பெண்கள் கருத்தரிப்பதற்கு முன் மருத்துவர்களின் ஆலோசனை பெறவேண்டியது மிகவும் முக்கியமானது என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இந்த ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர்களில் 42.1% ருமாட்டிக் இதயநோய் இருந்ததும், 33.6% கர்ப்பிணிகளுக்கு பிறவிலேயே இதயநோய் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் 1029 கர்ப்பிணிகளில் மூன்றில் ஒரு பகுதி அதாவது 359 பேருக்கு நுரையீரல் உயர் ரத்த அழுத்தம் இருந்தது.