Infertility
Infertility File Photo
ஹெல்த்

”ஏன் பெண்கள மட்டும் குறை சொல்றீங்க?” - இந்தியாவில் அதிகரிக்கும் குழந்தையின்மை - காரணமும்.. தீர்வும்!

Justindurai S

குழந்தையின்மை என்பது ஆண்கள், பெண்கள் என இரண்டு பேரையுமே மனதளவில் பெரிய அளவில் பாதிக்கக் கூடியது. இந்தியாவில் திருமணமானவர்களில் 10 முதல் 14 சதவிகிதத்தினர் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒரு வருடமாக முயற்சித்தும் தானாக கருத்தரிக்க முடியவில்லை என்றால் கட்டாயம் மருத்துவ உதவியை நாடும்படி அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். ஒரு பெண் கர்ப்பிணி ஆவதை தடுக்க பல காரணிகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலனவற்றை நமது வாழ்க்கை முறையை மாற்றுவதின் மூலமாகவோ அல்லது மருத்துவ சிகிச்சை மூலமாகவோ குணப்படுத்தலாம்.

குழந்தையின்மை தொடர்பான பிரச்சனை மற்றும் செயற்கை முறை கருத்தரிப்பின் செயல்பாடு குறித்தும் பலருக்கும் இன்னும் முழுமையாக தெரியவில்லை. குழந்தையின்மை சிகிச்சைக்கு செயற்கை முறை கருத்தரிப்பு மட்டுமே உள்ளது என கருதக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள், இயற்கை முறையில் குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என ஒரு சில ஆண்டுகள் முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்காத இணையர்களுக்கு செயற்கை முறை கருத்தரிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.

Infertility

சமீப வருடங்களாக ஆண்களிடத்தில் குறைவான விந்தணு எண்ணிக்கையும் பெண்களிடத்தில் குறைவான கருமுட்டைகளும் இருப்பதை அதிகமாக பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறை, சுற்றுப்புறச் சூழ்நிலை, போதை, மது மற்றும் புகையிலைக்கு அடிமையாதல். அதுமட்டுமின்றி பலரும் நீரிழிவு, தைராய்டு மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி (pcod) போன்ற நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தையின்மைக்கு இதுவும் ஒரு காரணமாகும்” என டாக்டர். ப்ரீத்தி குப்தா கூறுகிறார்.

குழந்தையின்மை என்பது உலகளாவிய பிரச்னை. இந்தியாவில் 10 முதல் 14 சதவிகிதத்தினர் குழந்தையின்மையோடு இருக்கிறார்கள். அதிலும் மாநகரங்களில் இது அதிகமாக இருக்கிறது. ஆறு இணையர்களில் ஒருவர் குழந்தையின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. “குழந்தையின்மை என்று சொன்னாலே அதற்கு பெண்கள் தான் காரணம் எனக் கூறுவார்கள். உண்மையில் 20% குழந்தையின்மைக்கு இருவருமே காரணம். மீதமுள்ள 40% ஆண்களும், 40% பெண்களும் காரணமாக இருக்கிறார்கள்” என டாக்டர். ஷோபா குப்தா கூறுகிறார்.

Infertility

பெண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் ஏற்படுகிறது என குப்தா கூறுகிறார்:

இடுப்பு அழற்சி நோய்

பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் ஏற்படக்கூடிய தொற்றின் காரனமாக இந்நோய் ஏற்படுகிறது. இது பெண்களிடத்தில் பொதுவாகக் காணப்படுகிறது. பாலியல் உறவு மூலம் ஏற்படும் தொற்றே இதற்கு முக்கிய காரணம். இந்நோயை எளிதாக குணப்படுத்தலாம். உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் குழந்தையின்மை பிரச்சனைக்கு இட்டுச் செல்லும். பத்தில் ஒரு பெண் இந்நோயால் குழந்தைப்பேறை இழக்கிறாள் என புள்ளிவிவரம் கூறுகிறது.

எண்டோமெட்ரியோசிஸ்

25 வயது முதல் 40 வயது வரையுள்ள இளம் பெண்களையே இந்நோய் தாக்குகிறது. வழக்கமாக கருவின் உள்ளே இருக்கும் எண்டோமெட்ரியம், வெளிப்புறத்தில் காணப்பட்டால், அதாவது பெண் பிறப்புறுப்பின் மேல் காணப்படுவதே எண்டோமெட்ரியோசிஸ். இது நீண்டகால அழற்சியை ஏற்படுத்தி உள்காயங்களையும், வயிற்று வலியையும், மாதவிடாய் பிரச்சனைகளையும், மோசமான உடலுறவையும் உண்டாக்கும். முடிவில் இது குழந்தையின்மைக்கு காரணமாக அமைகிறது.

சினைப்பை நீர்க்கட்டி (PCOS)

இது பெண்ணின் சினைப்பையை பாதிக்கிறது. இப்பிரச்சனை பெண்களிடத்தில் பொதுவாகக் காணப்படுகிறது. இயற்கையாகவே பெண்ணின் சினைப்பையில் அதிகளவில் நீர்க்கட்டிகள் இருக்கும். 8 மில்லிமீட்டர் அளவில் இருக்கும் இந்த நீர்க்கட்டிகள் ஆபத்தில்லாதவை. பைகள் போன்றிருக்கும் இந்த நீர்க்கட்டிகளில் தான் கருமுட்டை உருவாகிறது. சினைப்பை நீர்க்கட்டி (PCOS) பிரச்சனை இருந்தால், இந்தப் பைகளால் கருமுட்டையை வெளியேற்ற முடியாது. கருமுட்டை வெளிப்படுவதை இது தடுக்கிறது.

Infertility

கருமுட்டை குழாயில் அடைப்பு

கரு முட்டைகளும் விந்தணுவும் கருமுட்டை குழாய் வழியாகவே பயணிக்கிறது. பெண்ணின் கரு முட்டையும் ஆணின் விந்தணுவும் சேர்ந்து கருவுற்ற முட்டையாக மாறுவது இங்குதான் நடைபெறுகிறது. இந்த சமயத்தில் ஒன்று அல்லது இரண்டு கருமுட்டை குழாய்களிலும் அடைப்பு இருந்தால் இயற்கை கருத்தரித்தல் நடக்காது. இந்த அடைப்பிற்கு பாலியல் உறவு மூலம் ஏற்பட்ட தொற்றே காரணமாக இருக்கும்.

தைராய்டு

மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை இருக்கும் பெண்களில் 70 சதவிகிதத்தினருக்கு தைராய்டு சுரப்பி செயலிழக்கும் அபாயம் உள்ளது. குழந்தையின்மைக்கு இதுவும் ஒரு காரணமாகும் என இந்திய தைராய்டு சங்கம் கூறுகிறது. நம் உடலில் உள்ள செல்களின் நடவடிக்கைகளை தைராய்டு ஹார்மோன்களே அடக்கி ஆள்கிறது. ஆகவே தைராய்டின் செயல்பாடு மோசமாக இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும்.

Infertility

ஃபைப்ராய்டு கட்டிகள்

இது பெண்களிடத்தில் பொதுவாக காணப்படுவது. பெரும்பாலான சமயங்களில் ஃபைப்ராய்டு கட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இது நம் உடலில் எந்த அறிகுறியையும் காண்பிக்காது. இதற்கு சிகிச்சையும் தேவைப்படாது. அரிதான சமயங்களில் இந்த கட்டிகள் புற்றுநோயாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் குழந்தையின்மை குறித்து பேச்சுக்கள் வந்தாலே, முழு பழியையும் பெண்கள் மீதே சுமத்துவார்கள். தனக்கும் இதில் பங்குள்ளது என்பதை ஆண்கள் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை. இதனால் குழந்தையின்மை குறித்து பேசவோ அல்லது அதற்குண்டான சிகிச்சை எடுப்பதோ பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கருத்தரித்தல் இயற்கையாக நடைபெறாத போது கணவனும் மனைவியும் மன உளைச்சல் அடைகிறார்கள்.

ஏனென்றால் இங்கு குழந்தையின்மை என்பது சமூகத்தில் பேசக்கூடாத, விவாதிக்கக் கூடாத விஷயமாக இருக்கிறது. ஆனால் சமீப காலங்களாக இந்தப் போக்கு மாறி வருகிறது. குழந்தையின்மை என்பது ஒரு மருத்துவ பிரச்சனை, இதனை சிகிச்சை மூலம் தீர்க்கலாம் என ஆண்களும் பெண்களும் புரிந்து கொண்டுள்ளனர். மேலும், கடந்த பத்தாண்டுகளில் ஆண் மலட்டுத்தன்மை குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தையின்மைக்கு ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிவந்துள்ளது” என டாக்டர் ப்ரீத்தி குப்தா கூறுகிறார்.

Infertility

ஆண் மலட்டுத்தன்மை அல்லது ஆண்களின் விந்தணு குறைவாக இருப்பதற்கு காரணங்களாக டாக்டர். ப்ரீத்தி கூறுபவை:

புகைபிடித்தல், மதுபானம் மற்றும் போதைப்பொருள் பழக்கம்:

நீங்கள் புகைப்பிடிப்பவராக இருந்தால், உடனடியாக அந்தப் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். விந்தணு பலவீனமடைவதற்கும் அதன் இயக்கம் மோசமாக இருப்பதற்கும் புகையிலை முக்கிய காரணமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குரோமோசோம்கள் மரபணு ரீதியாக பாதிப்படைவதற்கும் இவை காரணமாக இருக்கிறது. மேலும் அதிகமான மதுப்பழக்கம் பாலியல் உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு டெஸ்டோஸ்டிரான் அளவையும் குறைக்கிறது. போதைப்பழக்கம் இருந்தால் உங்களின் விந்தணு எண்ணிக்கை குறையக்கூடும்.

அதிகப்படியான உடற்பயிற்சி

எதையும் அதிகப்படியாக செய்வது எப்போதும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். உடற்பயிற்சி செய்வது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி டெஸ்டோஸ்டிரான் அளவையும் விந்தணுவின் வீரியத்தையும் குறைக்கும். அதற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. எதுவும் ஒரு அளவாக இருக்க வேண்டும். ஆகையால் உங்கள் விந்தணு பாதிக்காத அளவிற்கு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

Infertility

சூடு

வெந்நீரில் குளிப்பதை முடிந்தளவு தவிர்த்து விடுங்கள். சுடுதண்ணீரில் குளிப்பதால் உங்கள் உடலின் வெப்பநிலை கூடுகிறது. இதனால் விந்தணுவின் எண்ணிக்கையும் வீரியமும் குறையக்கூடும். மேலும் லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்தாதீர்கள். இறுக்கமான ஆடையை அணியாதீர்கள். இறுக்கமான ஜீன்ஸ் அல்லது பேண்ட் அணிவதால் உங்கள் பிறப்புறுப்பின் (விதைப்பை) வெப்பநிலை அதிகரிக்கிறது. இது விந்தணு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மன அழுத்தம்

தீவிர மன அழுத்தத்தில் பாதிக்கபட்டிருந்தீர்கள் என்றால், அதுவும் கருத்தரித்தல் தொடர்பான பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தது என்றால் உங்கள் விந்தணுவின் எண்ணிக்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.