ஹெல்த்

மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால் நோயாளிகள் அவதி: காஞ்சி புற்றுநோய் மருத்துவனையின் அவலம்

EllusamyKarthik

காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனைக்குள் மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால், நோயாளிகளுக்கும், பொது மக்களுக்கும் மேலும் புற்றுநோய் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரை பேட்டை பகுதியில் புற்றுநோய் தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மருத்துவமனை வளாகத்தின், பின்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் முட்செடிகள், புற்கள் ஏராளமாக முளைத்துள்ளன. அங்கேயே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. வாரத்திற்கு இருமுறை புற்றுநோய் மருத்துவமனையில் தேங்கியுள்ள மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் மற்றும் புற்களை மருத்துவமனை ஊழியர்கள், தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இதில், ஆபத்தான மருத்துவ கழிவுகள் ரத்தம் உறைந்த பஞ்சுகள் ஊசிகள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், பிளாஸ்டிக் குப்பைகளையும் எரிக்கின்றனர். இதனால், மருத்துவமனையை சுற்றி பெரும் புகை மூட்டம் எழுகிறது.

மருத்துவமனையில், உள்-நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள், புகை மூட்டத்தால் மூச்சு விட முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். நோயாளிகள் மட்டுமல்லாமல் அவர்களை பார்க்க வரும், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் புகையினால், சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகளவு சேர்க்கப்படும் மருத்துவ கழிவுகளை வருடக்கணக்கில் மலை போல் குவித்து வைப்பதனால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மருத்துவ கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே செல்லும் புகை சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய காரப்பேட்டை, சின்னகரை, செட்டியார் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளையும் கடுமையாக பாதிப்படைய வைக்கிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். 

இப்படி புற்றுநோய் தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் மருத்துவ கழிவுகளை அகற்றவும், மருத்துவமனை வளாகத்தில் கழிவுகளை தீ வைத்து கொளுத்தப்படுவதை தடுக்கவும் வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் மக்கள்.

இதுகுறித்து புற்றுநோய் மருத்துவமனையின் இணை இயக்குனர் மனோகரன் கூறியதாவது:- 

மருத்துவ கழிவுகள் குப்பைகள் உடன் சேர்ந்து இருக்கிறது என்பது என்றால் நிச்சயம் தவறு தான். மேலும் எந்த குப்பையும் இருக்கக் கூடாது. இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் மருத்துவமனை அமைந்திருப்பது ஊராட்சி பகுதி என்பதனால் ஊராட்சியில் இருந்து குப்பைகளை சேகரித்து கொண்டு செல்ல வசதி இல்லை எனவே மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியில் இருந்து லாரிகள் மூலம் குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை தொடர்புகொண்டு கேட்கும்போது:- 

அரசு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் முறையாக அப்புறப்படுத்த படுகின்றனவா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். மேலும் மருத்துவ கழிவுகள் அல்லாத இதர கழிவுகளை முறையாக மருத்துவமனை இருந்து அப்புறப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.