ஹெல்த்

வேகமாக பரவும் மெட்ராஸ்-ஐ.. அலட்சியமாக விட்டால் கண்பார்வையை இழக்க நேரிடும்! எச்சரிக்கை!

webteam

மெட்ராஸ் ஐ என்று பொதுவாக அழைக்கப்படும் ன்ஜக்டிவிடிஸ் நோய் (conjunctivitis) பாதிப்பு கடந்த சில நாட்களாக சற்று அதிகரித்து காணப்படுவதாக கண் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக மழைக்காலம் தொடங்கிவிட்டாலே இந்த விழி வெண்படல பாதிப்பு ஏற்படுவது வழக்கம்தான். மழைக்காலங்களில் பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்களால் ஏற்படும் இந்த பாதிப்பு ஒரு வாரத்தில் 10 பேருக்காவது கண்டறியப்படுகிறது என்கிறார் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் வசந்தா. குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கே இந்த நோய் எளிதில் ஏற்படுவதாகவும் கூறுகிறார்.

இரவு தூங்கும்போது கண்களில் அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து கண்களை மூடிக் கொள்ளுதல், கண்கள் சிவத்தல், நீர் வடிதல், வீக்கம், அதிகப்படியான உறுத்தல், விழிப்படலத்தில் உள்ள நரம்பில் லேசான ரத்தத்திட்டு கசிவு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

இந்நோய் தீவிர பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடியதல்ல என்றாலும், வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவி விடும் என்பதால் நோய் பாதித்தவரை தனிமைப்படுத்துதல், கண் மருந்து போட்டுவிடுவோர் உடனடியாக கை கழுவுதல், நோய் ஏற்பட்டோரின் பொருட்களை தொடுவதை தவிர்த்தல் அவசியமானது என கண் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மழைக்காலத்தில் சாதாரணமாக வரும் மெட்ராஸ் ஐ என்று கருதி, தீவிரமான வேறு சில கண் பிரச்னைகளை யாரும் அலட்சியமாக விட்டுவிடக் கூடாது என்றும், அப்படி விட்டால் அது கண்பார்வை இழப்பை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கிறார் வசந்தா.

  • கருவிழி பாதிப்பு ( கேரடைடிஸ் - keratitis)
  • ஐரிஸ் பாதிப்பு ( Uveitis) 
  • கண் அழுத்த நோய் - Giaucoma 
  • கண்புரை வெடித்தல் 
  • Sub conjunctival hemerage - கண்ணில் அடி பட்டால் ஏற்படும் நோய்
  • அலர்ஜிக் conjunctivitis

ஆகிய இந்த நோய்களும் கண் சிவத்தல் என்ற முக்கிய அறிகுறியையே கொண்டிருக்கும் என்பதால் கண்ணில் எந்த அறிகுறிகள் தெரிந்தாலும் மருத்துவரை அணுக வேண்டிது அவசியம் என்கிறார்.