ஹெல்த்

காலையில் இதை செய்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?

Sinekadhara

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்தே உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நோயெதிர்ப்பு சக்தி ஒரே நாளில் அதிகரித்துவிடாது. அதற்கு சில உணவு பழக்கவழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் கடைபிடிப்பது அவசியம்.

யோகா
காலையில் படுக்கையை விட்டு எழுந்து உடற்பயிற்சி செய்ய கஷ்டமாக இருந்தால், படுக்கையிலேயே செய்யக்கூடிய சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். Child Poses என்று சொல்லக்கூடிய ஆசனங்கள் இறுக்கமான உடல்தசையை தளர்த்தி, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இந்த பயிற்சிக்கு பிறகு, நேராக அமர்ந்து சில மூச்சுப் பயிற்சிகளை செய்தால் மனமும் உடலும் உற்சாகமாகும்.

ஆயில் புல்லிங்
இது ஒரு பழமையான ஆயுர்வேத முறை. சுத்தமான கோல்டு ப்ரஸ்ஸுடு தேங்காய் எண்ணெயைக் கொண்டு 4-6 நிமிடங்கள் ஆயில் புல்லிங் செய்யவேண்டும். தேங்காய் எண்ணெயில் இருக்கும் லாரிக் அமிலம் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வாயை சுத்தப்படுத்தும். காலை எழுந்தவுடன் இதை வெறும் வயிற்றில் செய்துவர உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

உடல் வறட்சிக் கூடாது
உடல் வறட்சி ஆகாமல் நீரேற்றத்துடன் இருப்பது ஆரோக்யமான வாழ்க்கைக்கு மிகமுக அவசியம். அதனால்தான் காலை எழுந்தவுடன் இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும் என்கிறார்கள். லெமன் வாட்டர், ஹனி வாட்டர் போன்றவற்றையும் காலையில் குடிப்பது சிறந்தது.

உடற்பயிற்சி
சோர்வை விரட்ட சிறந்த வழி உடற்பயிற்சி செய்வதுதான். காலை எழுந்தவுடன் 30-40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நாள்முழுவதும் உற்சாகத்தை கூட்டும். அதுமட்டுமல்லாமல் உடலை வலிமையாக்கி, தளர்வாக்கி ஸ்டாமினாவை அதிகப்படுத்தும். நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்ளிங் போன்ற எளிய பயிற்சிகளிலிருந்து தொடங்கலாம்.

முழுமையான காலை உணவு
காலை உணவை தவிர்க்கக்கூடாது. ஒருநாள் முழுவதற்கும் தேவையான எனர்ஜி காலை உணவிலிருந்துதான் உடலுக்கு முக்கியமாகக் கிடைக்கிறது. எனவே புரதம், மாவுச்சத்து, கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகிய அனைத்தும் கிடைக்கக்கூடிய பழங்கள், தானியங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்தும் காலை உணவில் இடம்பெறவேண்டும். இது இயற்கையாகவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.