ஹெல்த்

”முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சென்னையில் சிகிச்சை” - திருவள்ளூர் கலெக்டர்!

webteam

ஆவடி அருகே அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்த செய்தியின் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் குழுவினர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது உடல்நிலையை பரிசோதித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்  இவர்களின் மூத்த மகள் டானியாவுக்கு 9 வயதாகிறது. வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்றுவரும் டானியா, அரியவகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். என்ன வகை நோய் என தெரியாமல் 6 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு அலைவதாகவும், தங்களது மகளுக்கு அரசு மருத்துவ உதவி வழங்க வேண்டும் எனவும் பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானது.

இந்த செய்தியின் எதிரொலியாக தற்போது திருவள்ளூர் மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரது உடல்நிலையை பரிசோதித்தனர். மேலும், இதுவரை அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தனர். சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்க ஏற்பாடு செய்ய அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸூம் சிறுமியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். பின்னர் பேசிய அவர், “அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தரப்படும். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; ஓரிருநாளில் சிறுமிக்கு சிகிச்சை தொடங்கும்” என்று உறுதி அளித்தார்.