உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மலம் கழிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? இது, புதிய உணவுக்கு வழிவிடச் சொல்லி பெருங்குடலுக்கு வயிறு சமிஞை அளிக்கும் இயல்பான உடல் செயல்பாடுதான் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் இதேபோல் தினமும் நிகழ்கிறது என்றாலோ இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது என்றாலோ இது பிரச்சினைக்குரியது என்கிறார்கள். பால் பொருள்கள், காரம் நிறைந்த உணவுகள் போன்ற குறிப்பிட்ட உணவுகள் சார்ந்த ஒவ்வாமை, அதிக கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் இயல்பான எதிர்வினை. அதிக கஃபைன் அல்லது சர்க்கரை உள்ளடக்கம் கொண்ட உணவு ஆகியவற்றால் இது நிகழலாம். மூளைக்கும்-குடலுக்கும் இடையிலான தொடர்பு உணவு செரிமானத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
எனவே, அதிக மன அழுத்தம் உடையவர்களுக்கு உணவு சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் உத்வேகம் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். Irritable Bowel Syndrome போன்ற குடல் சார்ந்த பிரச்னைகள், இரவு நேரப் பணியில் இருப்பவர்கள், அதிக நார்ச்சத்து உணவு உட்கொள்பவர்கள் ஆகியோருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். அனைத்து ஊட்டச்சத்துகளையும் உள்ளடக்கிய சமநிலை வாய்ந்த உணவு உட்கொள்ளுதல், செரிமானத்துக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை தெரிந்துகொண்டு அவற்றைத் தவிர்த்தல், போதுமான அளவு நீர் அருந்துதல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றால், உணவு உண்டு முடித்தவுடன் மலம் கழிக்கும் பிரச்னையிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.