காரீயம் கலப்பு
காரீயம் கலப்பு முகநூல்
ஹெல்த்

மஞ்சள் தூளில் நிறமேற்றுவதற்காக சேர்க்கப்படும் காரீயம் எனும் லெட் குரோமேட்; நரம்புகளில் பாதிப்பு?

PT WEB

மஞ்சள் தூளை பயன்படுத்துவதால் உடல் நலனுக்கு நன்மை என்பதால் அதிக அளவில் சமையலில் சேர்ப்பவர்கள் இந்திய மக்கள். ஆனால், அந்த மஞ்சள் தூள் கலப்படமற்றதாக இருக்கிறதா என்பதுதான் கேள்வி..

பெரும்பாலான வீடுகளில் சமையலில் மஞ்சள் தூள் சேர்ப்பதை தவிர்க்க மாட்டார்கள். முகத்திற்கு மஞ்சள், விழுந்து காயம்பட்டால் காயத்தில் மஞ்சள், ஜலதோஷம் பிடித்தால் பாலில் மஞ்சள், நிறமூட்ட மஞ்சள் என எதற்கெடுத்தாலும் மஞ்சளை பயன்படுத்துவது இந்திய குடும்பங்களின் வழக்கம். 

மஞ்சள் தூள்

தேசிய மஞ்சள் வாரியத் தகவலின்படி, 2022 - 23 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3.24 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மஞ்சள் சாகுபடி
நடந்துள்ளது. இதில் 11.61 லட்சம் டன் மஞ்சள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உலக அளவிலான மஞ்சள் உற்பத்தியில் இது 75 விழுக்காடாகும். இந்தியாவில் 20 மாநிலங்களில் 30 வகையான மஞ்சள் வளர்க்கப்படுகிறது. 

மகாராஷ்டிரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் மஞ்சள் உற்பத்தி செய்கின்றன. உலக மஞ்சள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 62 விழுக்காடாக உள்ளது. இந்தியாவில் இருந்து வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா மற்றும் மலேசியா நாடுகளுக்கு மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆனால் மஞ்சள் தூளில் நிறமேற்றுவதற்காக சேர்க்கப்படும்
லெட் குரோமேட் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தி எகனாமிஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. காரீயம் எனப்படும் லெட் காரணமாக இதயம் மற்றும் மூளை பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

தெற்காசியப் பகுதிகளில் 2019 ஆம் ஆண்டில் 14 லட்சம் உயிரிழப்புகள், காரீயம் கலந்த உணவு ஒரு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் 815 மில்லியன் குழந்தைகள் அதாவது மூன்றில் ஒரு குழந்தை காரீயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக வளர்ச்சிக்கான மையம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காரீயம்

காரீயம் என்பது குழந்தைகளின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிக அளவில் காரீயம் கலந்த உணவுகளை உட்கொள்வது மூளை, நரம்பு மண்டலத்தை பாதிப்பதோடு, கோமா போன்ற தீவிர பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. காரீயம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிப்பது தெரியவந்துள்ளது. குழந்தைகளின் நடவடிக்கை மாறுபாடுகளுக்கும் காரியம் காரணமாகிறது. 

அனீமியா, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, இனப்பெருக்க உறுப்புகளின் பாதிப்பு போன்றவற்றுக்கும் காரீயம் பாதிப்பை உண்டாக்குகிறது. Lancet Planetary Health ல் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ”தெற்காசியாவில் அதிக அளவு காரீய பாதிப்பு அறியப்படுகிறது. தெற்காசியாவில், சமையல் பாத்திரங்கள், அழகுசாதனப்பொருட்கள் மற்றும் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் காரீயம் இருப்பது தெரிய வந்துள்ளது. பலவிதங்களில் காரீயம் கலப்பு இருக்கும் நிலையில்,
கலப்பட மஞ்சள் தூளில் காரீயம் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.