புற்றுநோய் pt web
ஹெல்த்

புற்றீசல் போல் பரவும் புற்றுநோய் பாதிப்பு.. 25 ஆண்டுகளில் 75% அதிகரிக்க வாய்ப்பு

புற்றுநோய் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது புற்றீசல் போல் புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கிவிட்டதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.

PT WEB

புற்றுநோய் குறித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்டு வந்த நிலை மாறி, தற்போது புற்றீசல் போல் புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கிவிட்டதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இதனை உறுதிபடுத்தும் வகையில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை இந்தியா உட்பட உலக நாடுகளை நடுங்கவைத்துள்ளது.

புற்றுநோய்

உலகளவில் அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் இறப்புகள் 75 விழுக்காடு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட் ஆய்வறிக்கை... 2050ஆம் ஆண்டுக்குள் சுமார் 3 கோடியே 5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்றும், ஒரு கோடியே 86 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழக்கக் கூடும் என்றும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆய்வின்படி, உலகிலேயே புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1990 முதல் 2023 வரை இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 26.4% அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் சீனாவில் பாதிப்பு 18.5% குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 1990-ல் லட்சத்தில் 84 பேருக்கு இருந்த புற்றுநோய் பாதிப்பு, 2023-ல் லட்சத்தில் 107 பேராக உயர்ந்துள்ளது. அதேபோல், இறப்பு விகிதமும் அதிகரித்து, 2023-ல் 12.1 லட்சம் இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போன்ற வாழ்க்கைமுறை காரணிகள், உலகளவில் 40%க்கும் அதிகமான புற்றுநோய் இறப்புகளுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

உலக சுகாதாரத்தில் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைகளுக்கும், செயல்பாட்டிற்கும் குறைவான முன்னுரிமையே வழங்கப்படுவதாகவும், பல நாடுகளில் சவாலை எதிர்கொள்ளப் போதுமான நிதி இல்லை எனவும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் லிசா ஃபோர்ஸ் கவலை தெரிவித்துள்ளார். எனவே, வளங்கள் குறைவாக உள்ள நாடுகளில் புற்றுநோய் சுமையின் அதிகரிப்பைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் லிசா ஃபோர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.