ஹெல்த்

’ உடலை கடலை மிட்டாய் பலப்படுத்தும்’ - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.!

Sinekadhara

இந்த ஊட்டச்சத்து மாதத்தில் கடலைமிட்டாயில் இருக்கும் ஊட்டச்சத்துகளைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம் என்கிறார் தெலுங்கானாவின் ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன்.

இன்று ட்விட்டரில் கடலைமிட்டாயில் இருக்கும் சத்துகள் பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘’கடலைமிட்டாயில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. வேர்க்கடலையும், வெல்லப்பாகும் எப்படி சேர்ந்து இந்த கடலைமிட்டாய் உருவாகிறதோ அதேபோல், வெல்லப்பாகின் நன்மையும், வேர்க்கடலையின் நன்மையும் சேர்ந்து உடலுக்கு அபரிமிதமான ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுப்பொருள் இது. எளிதில் கிடைப்பதால் இதன் அருமையை பலரும் உணருவதில்லை.

வெல்லப்பாகில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகம். இது உடலை இளமையாக வைத்திருக்கிறது. வேர்க்கடலையில் இருக்கும் ஃபோலிக் ஆசிட் இதயத்தைப் பாதுகாக்கிறது. ஃபைட்டோ ஃபினால்ஸ் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. மறதிநோய் வரமால் பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் இ. ஜிங்க் மற்றும் மக்னீசியம் இருப்பதால் தோலை பளபளப்பாக வைக்கிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கான அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

இவ்வளவு சத்துகள் நிறைந்த உணவை தினமும் நாம் உண்பதோடு குழந்தைகளுக்கும் கொடுத்து பழக்கவேண்டும். பள்ளிகளில் சத்துணவாகவும் கொடுக்கலாம்’’ எனக் கூறியுள்ளார்.