சிறப்புக் களம்

நேற்றைய சினிமா 1: அஜித்தின் ’வாலி’க்கு உதவிய எம்.ஜி.ஆர்!

நேற்றைய சினிமா 1: அஜித்தின் ’வாலி’க்கு உதவிய எம்.ஜி.ஆர்!

webteam

சினிமா, கோடிகளைக் கொட்டி கோடிகளை அள்ளும் கரன்சி வியாபாரம். இது ஹீரோக்களை நம்பியே அதிகம் நடக்கிறது. ’கதையை நம்பிதான் சினிமா’ என்று லாஜிக்காக பேசினாலும் ஹீரோவை நம்பிதான் சினிமா என்பதை யாரும் மறுக்க முடியாது. கதையை நம்பி 2 கோடி முதலீடு செய்து, பத்து கோடி எடுப்பதை விட, ஹீரோ படத்துக்காக ஐம்பது கோடி போட்டு எண்பது முதல் நூறு கோடியை அள்ளத்தான் நினைக்கிறார்கள், பெரும் தயாரிப்பாளர்கள். இப்படி உருவாகும் ஒவ்வொரு ஹீரோ படங்களுக்குப் பின்னாலும் ஏகப்பட்ட கதைகள். மறைக்கப்பட்டும் மறைக்கப்படாமலும் ஏராளமாக இருக்கிறது. அவற்றைப் பதிவு செய்யும் முயற்சி இது.

அப்போது, ‘ராசி’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் அஜித். வந்து கதை சொன்னார் வசந்திடம் உதவி இயக்குனராக இருந்த எஸ்.ஜே.சூர்யா. கதையை தயாரிப்பாளர் தரப்பும் கேட்டு, பிரமாதம் என்று பாராட்டியது. இயக்குனர் ஆகப் போகும் ஆசையில் இருந்த எஸ்.ஜே.சூர்யாவுக்கு மகிழ்ச்சி. திடீரென்று ஒரு நாள் அவரை அழைத்த தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, ‘உங்க கதை சூப்பராக இருக்கு. ஆனா, அதை இப்ப படமா பண்ண வேண்டாம். வேறொரு கதை பண்ணுங்களேன்’ என்றார். ’என்ன பிரச்னைன்னு தெரிஞ்சுக்கலாமா?’ என்றார் எஸ்.ஜே.சூர்யா.

‘ஒரு பிரச்னையுமில்லை. அஜித்துக்கு டபுள் ஆக்‌ஷன் கதை பண்ணினா நல்லாருக்கும்னு நினைக்கிறோம்’ என்றார். ’சரி’ என்றார் சூர்யா. கதைக்கான ஐடியாவையும் சொன்னார் தயாரிப்பாளர். அதாவது, ’டபுள் ஆக்‌ஷன் கதை. ஒருத்தர் ஹீரோ. மற்றொருவர் வில்லன். உதாரணத்துக்கு எம்.ஜி.ஆரின் ’நீரும் நெருப்பும்’ படத்தை இன்ஸ்பிரேஷனா வச்சுக்கோங்க’ என்றார்.

அதில் இருந்து நூல் பிடித்த எஸ்.ஜே.சூர்யா பதினைந்தே நாட்களில் உருவாக்கிவிட்டார் முற்றிலும் வித்தியாசமான கதையை. கேட்ட எல்லாருக்கும் மகிழ்ச்சி. இதைக் கண்டிப்பாக பண்ணலாம் என்று முடிவு செய்தார்கள். அதுதான், ’வாலி’!

இந்தக் கதைக்கு எம்.ஜி.ஆர் படம்தான் இன்ஸ்பிரேஷன் என்று சொன்னாலும் அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் துளியும் சம்பந்தமில்லாமல் கதை பண்ணியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

ஷூட்டிங் தொடங்க வேண்டிய நேரத்தில் வந்தது பெப்சி- படைப்பாளிகள் பிரச்னை. சினிமா ஸ்டிரைக். அஜித், தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கு ஆதரவு தெரிவித்தார். அவர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் ஷூட்டிங்கையும் நடத்த முடிவு செய்தார். சென்னை மெரினாவில் பெப்சி ஆதரவோடு, ’வாலி’யின் ஷூட்டிங் நடந்தது. அந்தக் காட்சியில் அஜித்துடன் ஹீரோயினாக நடித்தவர், கீர்த்தி ரெட்டி. பிறகு அவர் நீக்கப்பட்டு, சிம்ரன் ஹீரோயினாக்கப்பட்டார்.

பெப்சி- படைப்பாளிகள் பிரச்னை முடிவுக்கு வந்த பிறகு ஷூட்டிங் தொடர்ந்தது. படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வருவார் ஜோதிகா. ஆனால், முதலில் அவர் தொடர்பான காட்சிகளை அதிகமாக எடுத்தார்கள். பிறகு எடிட்டிங்கில் வெட்டியது போக, மிச்சமானது அவர் பாடல் காட்சியில் வருவது மட்டுமே. அந்தப் படத்துக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 1 லட்சம் ரூபாய். 

ஷூட்டிங் முடிந்து படம் ரிலீஸ் ஆகிவிட்டது. முதல் இரண்டு மூன்று நாட்களில், நல்ல டாக் வரவில்லை. ஆனால், தயாரிப்பாளர் நம்பிக்கையாக இருந்தார். அப்போதெல்லாம் படம் பிக்கப் ஆக ஒரு வாரம், பத்து நாள் ஆகும். ஆனால், எஸ்.ஜே.சூர்யாவுக்கு நம்பிக்கையே இல்லை. வருத்தமாகக் காணப்பட்டார்.

படம் ரிலீஸ் ஆன நான்காவது நாள், ‘கே.பாலசந்தர் போன் செய்து, யாருப்பா அந்த டைரக்டர். படம் பிரமாதம்’ என்று பாராட்ட உயிர் வந்தது எஸ்.ஜே.சூர்யாவுக்கு. அடுத்தடுத்த நாட்களில் படம் பிக் அப் ஆனது. ரிலீஸ் ஆன  அனைத்துத் தியேட்டர்களிலும், ஹவுஸ்புல் போர்டு. 

’அஜீத்தின் சிறந்த படங்களில் ஒன்று’ என்று புகழப்படும் இந்த ’வாலி’க்குப் பின்னுள்ள கதை இது.

-(தொடரும்)