சிறப்புக் களம்

சபரிமலைக்கு செல்ல முயலும் பெண்கள் ! சிக்கலில் பக்தியும் தீர்ப்பும்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும் சிலர் குரல் எழுப்புகின்றனர். பாலின சமத்துவத்துக்கு இந்தத் தீர்ப்பு ஒரு உதாரணம் என பெண்கள் அமைப்புகள் கருத்துகளை தெரிவித்தனர். ஆனால், சபரிமலை கோவிலுக்கு என்று ஓர் ஐதீகம் இருக்கிறது அது காக்கப்பட வேண்டும் பந்தள அரசு குடும்பத்தினரும், தந்திரிகளும் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து தீர்ப்பு வந்ததற்கு பின்பு ஐப்பசி மாதப் பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டதால் பெண்கள் சபரிமலைக்கு செல்ல திட்டமிட்டனர். ஆனால், அவர்களை பக்தர்கள் வழியிலேயே, அதாவது பம்பாவிலேயே நிறுத்தப்பட்டனர். இதையும் மீறி ரெஹானா பாத்திமா என்ற பெண்ணியவாதியும், ஒரு பெண் பத்திரிக்கையாளரும் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ரெஹானா பாத்திமாவுக்கு போலீஸ் உடை அணிவித்து ஐ.ஜி. தலைமையிலான பாதுகாப்போடு பம்பாவில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டனர்.பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதனையடுத்து போலீஸார் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியவாறு பெண்களை அனுமதிக்க முடியாது என போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள அரசு, இந்த இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து ரெஹானா பாத்திமாவும், உடன் வந்த பெண் பத்திரிக்கையாளரையும் திருப்பி அனுப்பினர். இதன் பின்தான் சபரிமலை மாலை அணிந்து பல ஆபாசமாக போட்டோக்களை ரெஹானா பாத்திமா தன் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்தார். மேலும், மதவாதத்தை தூண்டும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்தார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரெஹானா பாத்திமாவை கைது செய்தனர். பின்பு, இப்போது ஜாமீனில் வெளியே வந்தார். அதேபோல ஸ்வீட்டி மேரி என்ற பெண்ணும் இரண்டு முறை சபரிமலைக்கு செல்ல முயன்று தோல்வியடைந்தார். பின்பு, திருப்தி தேசாய் மஹராஷ்ட்டிராவில் இருந்து வந்து செல்ல முயன்று தோல்வியடைந்தார்.

இப்போது சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற அமைப்பின் மூலம் 11 பெண்கள் நேற்று பம்பையில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டனர். ஆனால் அவர்களை அனுமதிக்க மறுத்து பம்பையில் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்து அவர்களை பாதுகாப்புடன் சபரிமலை நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால் பாதிவழியிலேயே பெண்கள் மீது தாக்குதல் நடத்த சில போராட்டக்காரர்கள் முற்பட்டதால். பெண்கள் சிதறி ஓடினர். மேலும், சபரிமலை செல்லும் முடிவை பெண்கள் குழு கைவிட்டனர். போலீஸாரும் பெண்கள் நுழைவுக்கு எதிராக போராடுபவர்கள் மீது தடியடி நடத்த முடியாது எனவே உங்கள் பாதுகாப்பை கருதி நீங்கள் திரும்பி செல்லுங்கள் என தெரிவித்துவிட்டனர். ஆனால் மீண்டும் வருவோம் என சூளுரைத்தனர் பெண்கள் அமைப்பினர்.

போராடும் இடமா சபரிமலை ?

சபரிமலை தீர்ப்புக்கு கேரளாவிலும் சரி தமிழக்ததிலும் சரி பெண்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.  சபரிமலைக்கு செல்ல முயலும் பெண்கள் அனைவரும் பக்தியுடன் செல்கின்றனரா ? விரத முறைகளை கடைப்பிடிப்வர்களா ? ஐயப்பன் மீது ஈர்ப்பும் நம்பிக்கை கொண்டவர்களா ? என்ற கேள்விகளை முன்வைத்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது அதனால் செல்கிறோம் என்ற வீம்புக்கும், விளம்பரத்துக்குமே செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதுவரை சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்களின் விவரங்களையும் சமூக வலைத்தள பக்கத்தை பார்த்த பின்புதான் அவர்களின் நோக்கம் குறித்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. ஐயப்பன் கோவிலின் 18ஆம் படி ஏறுவோம் என்றும் பெண்கள் அமைப்பினர் கூறுகின்றனர். விரதமிருந்து இருமுடி கட்டுபவர்கள் மட்டுமே 18 படி ஏற அனுமதி உண்டு என்று தெரிந்தும் செல்கின்றனர் என்றால் சபரிமலை விவகாரத்தை தங்களது விளம்பரத்துக்கு பயன்படுத்துவதே நோக்கமாக இருக்கிறது என்று இந்து அமைப்புகள் கொதிக்கின்றனர்.

இது குறித்து மனிதி அமைப்பைச் சேர்ந்த திலகவதி கூறும்போது " பம்பாவில் குளித்துவிட்டு அர்ச்சகரிடம் இருமுடி கட்டுமாறு கேட்டோம், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனையடுத்து அவரிடம் வாதிட்டோம்.பின்பு நாங்களே இருமுடி கட்டிக்கொண்டு சென்றோம். எங்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸ் பாதுகாப்புடன் மலை ஏறினோம், ஆனால் போராட்டம் தீவிரமடைந்ததால் போலீஸ் எங்களை திரும்ப போகச் சொன்னார்கள். நாங்கள் கிட்டத்தட்ட 12 மணி நேரம் உணவு கூட எடுத்துக்கொள்ளாமல் அமர்ந்திருந்தோம். பின்பு மதுரைக்கு திரும்பிவிட்டோம்" என கூறினார்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு என்றாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம் மாநிலத்தின் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சுரேந்திரன் வெளியிட்ட ஓர் அறிக்கை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது அது "அரசின் நோக்கம் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தவிர, சமூக செயற்பாட்டாளர்களுக்கு அல்ல. எனவே, போராட்டக்காரர்களுக்கும், செயற்பாட்டாளர்களும் ஒரு வேண்டுகோள். சபரிமலை போராடுவதற்கான இடம் அல்ல. சபரிமலைக்கு வந்து உங்கள் போராட்ட எண்ணங்களையும், வலிமையையும் வெளிப்படுத்த வேண்டாம். சபரிமலை விஷயம் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

சபரிமலை சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தாலும், பக்தர்களுக்கு இதனால் சில சிக்கல்கள் இருந்தாலும் உண்மையான ஐயப்ப பக்தர்களை காக்க அம்மாநில அரசு இதுவரை தவறவில்லை. எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்களால்தான் சபரிமலை போராட்டக்களமாக மாறிவிட்டது என நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது சரிதான் என்றாலும், கோயிலின் விதிகளை மீறவும், விரத முறைகளை கடைப்பிடிக்காமலும் செல்லலாம் என்று தனது தீர்ப்பில் கூறவில்லை என்பதை பெண்கள் அமைப்பு புரிந்துக்கொள்ள வேண்டும்.