Athiyaman Neduman Anji pt web
சிறப்புக் களம்

அதியமான் நெடுமான் அஞ்சி.. சிறப்பு என்ன?

ஏற்காடு மலைப் பாதையில் ‘தகடூர் அதியமான்’ பெயர்ப் பலகையை மீண்டும் வைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். பலராலும் பேசப்படும் தமிழ் மன்னன் அதியமான் சிறப்பு என்ன?

PT WEB

சங்க இலக்கியங்கள் போற்றும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சி, தகடூரைத் தலைநகராகக் கொண்டு, கொங்குநாடு பகுதியை ஆண்ட குறுநில மன்னராவார். கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், வீரத்துக்கும் கொடைக்கும் பெயர்பெற்றவர்.

அதியமானின் புகழுக்கு மிக முக்கிய செய்தியாக, தனக்குக் கிடைத்த அபூர்வமான, நீண்ட ஆயுள் தரும் 'கருநெல்லிக்கனியை', தான் உண்ணாமல், தமிழ் வளர்த்த புலவர் ஔவையாருக்கு ஈந்த பெருந்தன்மை, சொல்லப்படுகிறது. தமிழகத்தின் ஏழு பெரும் வள்ளல்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், கலைகளையும் புலவர்களையும் போற்றிப் பாதுகாத்தவர். மௌரியப் பேரரசர் அசோகரின் கிமு. 3ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டுகளில், சேர, சோழ, பாண்டியருக்கு இணையாக 'சத்தியபுத்திரர்' (Satiyaputra) எனக் குறிப்பிடப்படுவது, அதியமான் நெடுமான் அஞ்சி மரபினர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் கரும்புப் பயிரை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் அதியமான் மரபினரே என்று, சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இன்றைய தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள 'தகடூர்', இவரது தலைநகராக விளங்கியது. இன்றும் அங்கு 'அதியமான் கோட்டை' சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. அதேபோல், விழுப்புரம் மாவட்டம் ஜம்பையில் கண்டறியப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டு, “அதியன் நெடுமான் அஞ்சி" என்று இவரது பெயரைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையுடன் நிகழ்ந்த பெரும் போரில் அதியமான் வீழ்ந்தார். இந்தப் போரைப் பற்றி 'தகடூர் யாத்திரை' என்னும் நூல் விவரிக்கிறது. அதியமான் வெறும் போர்வீரர் மட்டுமல்லாது, தமிழ் மொழி மீதும் கலைகள் மீதும் தீராத பற்றுகொண்ட ஒரு மாபெரும் அரசனாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.