சிறப்புக் களம்

பற்றாக்குறையாக உள்ள 22 ஆயிரம் கோடியை எங்கிருந்து பெறுவது? - தமிழக பட்ஜெட் ஓர் அலசல்

பற்றாக்குறையாக உள்ள 22 ஆயிரம் கோடியை எங்கிருந்து பெறுவது? - தமிழக பட்ஜெட் ஓர் அலசல்

webteam

2020 -2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இந்த அரசு சார்பில் தாக்கலாகும் கடைசி முழு பட்ஜெட் இதுதான். அதேபோல் நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள 10வது பட்ஜெட் இது. நடைபெறவுள்ள புதிய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் பலரும் இதனை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறார்கள்.

அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அதிமுக அரசினால் போட முடியும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று மூன்றாண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் வெளியாகும் பட்ஜெட் என்பது இதன் கூடுதல் சிறப்பு. இதை எல்லாவற்றைவிட நாட்டில் மிகுந்த நிதி நெருக்கடி நிலவி வரும் நேரத்தில், தாக்கல் செய்யப்படும் மாநில பட்ஜெட் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 


‘அம்மா விபத்து ஆயுள் காப்பீடுத் திட்டம்’

இந்த பட்ஜெட்டில் விபத்து மற்றும் காப்பீடு திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‘அம்மா விபத்து ஆயுள் காப்பீடுத் திட்டம்’ எனப் பெயர் வைத்துள்ளனர். மேலும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எந்தப் பகுதிகளில் உள்ள கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளும் நடைமுறை உறுதிப்படுத்திப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், அதாவது 2019 -20 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் 28,757.62 கோடி ரூபாய் பள்ளிக்கல்வி துறைக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் 34.181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக, கடந்த முறையைவிட இந்த ஆண்டிற்குமான 4,808.36 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது. ஏறக்குறைய 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்தமுறை அதிக நிதி ஒதுக்கீடு ஆகியுள்ளது.

‘முதலமைச்சர் கிராம வளர்ச்சி திட்டம்’

‘முதலமைச்சர் கிராம வளர்ச்சி திட்டம்’ என்ற ஒன்றை புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு 4.584.21 கோடி ரூபாய் உயர்கல்வித் துறைக்காக நிதியை ஒதுக்கி இருந்தார்கள். இந்தமுறை அந்தத் தொகை ரூ5,052.84 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டிற்கும் இம்முறைக்குமான இடைவெளித் தொகை 253.29 கோடி ரூபாய். ஆக, இந்தமுறை 253 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டுகளில் கல்விக்காக மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயை இந்த அதிமுக அரசு ஒதுக்கியுள்ளது.

கீழடியில் அருங்காட்சியகம் - ரூ12 கோடி ஒதுக்கீடு

பல காலமாகத் தமிழக மக்கள் அதிகம் பேசிய விஷயம் கீழடியில் ஒரு அருங்காட்சியகம் நிறுவப்பட வேண்டும் என்பது. இந்தமுறை அந்த அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது. மேலும், இதற்காக 12.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதை அந்தப் பகுதி மக்கள் இனிப்புக்களை வழங்கி வரவேற்றுள்ளனர். இதுபோக புதியதாக நான்கு இடங்களைத் தேர்வு செய்து கள ஆய்வுகள் தொடங்கப்பட உள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகளில் மிக முக்கியமானது பெண்கள் பாதுகாப்பு சம்பந்தமானது. அதாவது பெண்கள் மீதான வன்கொடுமை நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ‘நிர்பயா நிதி’க்காக 75.02 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, அரசுப் பேருந்துகளில் கேமிராக்களைப் பொருத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேளாண் துறைக்கு ரூ11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலனுக்காக இந்த பட்ஜெட்டில் 3,299.17 கோடி ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 2019-2020 ஆண்டிற்கான பட்ஜெட்டில் 12,563.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டில் அந்தத் தொகை 15,863 கோடியாக மாறியுள்ளது. கடந்த முறையைவிட ஏறக்குறைய 3000 ஆயிரம் கோடி வித்தியாசம் உள்ளது. சுற்றுலாத்துறைக்கு 90 கோடி ரூபாயும், வேளாண் துறைக்குக் கிட்டத்தட்ட 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டினை காட்டிலும் 1300 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த முறை தீயணைப்பு மீட்டுப் பணிகளுக்காக 405.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 403.76 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 1.92 கோடி ரூபாய் அளவு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்காக ரூபாய் 500 கோடியையும் மின்சாரத்துறைக்காக 20,115.56 கோடியும் சாலை பாதுகாப்புக்காக மட்டும் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக நிதி அறிக்கையில் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

மொத்த பட்ஜெட்டில் அரசின் வருவாய் 2,19,375 கோடி ரூபாயாக உள்ளது. இதில் திட்டமிட்டுள்ள செலவுத் தொகை 2,41,601 ஆக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆக, 22,225 கோடி ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது. இதுவே இந்த ஆண்டு ஒட்டுமொத்த பட்ஜெட்டின் புள்ளிவிவரம். அரசு பெற்றுள்ள கடனுக்காக ஆண்டிற்கு 37 ஆயிரத்து 120 கோடி ரூபாயை வட்டியாக மட்டுமே செலுத்தி வருகிறது. எனவே முன் உள்ள சவாலை அரசு எப்படி சமாளிக்கும்?

அறிவிப்புகளுக்கு நிதி எங்கே?

இந்த பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், “அரசின் அறிவிப்புகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கும் என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. பெட்ரோல் மூலம் கிடைக்கும் வரி, ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரி, டாஸ்மாக்-ல் இருந்து கிடைக்கும் வருவாய், கமர்ஷியல் வரியிலிருந்து கிடைக்கும் வருவாய், இவை எல்லாம் தான் தமிழக அரசின் வருவாய்க்கான மூலாதாரணமாக உள்ளன. மத்திய அரசினுடைய ஜிடிபி வளர்ச்சி என்பது 5 சதவீதமாகக் குறைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர், தமிழகத்தின் டிஜிபி 8 சதவீதத்திற்கு மேலாக அதிகரிக்கும் என நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கு 4.5 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தொகை உள்ளது. கடன் தொகைக்காக மட்டுமே நாம் 16 சதவீதம் வட்டி கட்டி வருகிறோம். அடுத்த வருடம் எப்படியும் 20 முதல் 22 சதவீதம் வட்டி செலுத்த வேண்டி வரும். அப்படிக் கொடுத்துவிட்டால் மீதம் எங்கே பணம் இருக்கிறது? ஆக, அரசு பட்ஜெட் மூலம் கணித்துள்ள வருவாய் குறையும் பட்சத்தில் இந்தத் திட்டங்களை எல்லாம் எந்த அளவுக்குச் செயல்படுத்த முடியும் என்பது கேள்விக்குறியே” என்கிறார்