தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; தொண்டர்களோடு இருக்க விரும்புகிறேன்; இனி என்னை அடிக்கடி திமுக மேடைகளில் காணலாம்.
உதயநிதி ஸ்டாலினின் சமீபத்திய பேச்சுகள் இவை. வேறு யாருக்கும் அரசியல் இவ்வளவு எளிதாக வாய்த்திருக்குமா என தெரியவில்லை. திமுக உறுப்பினராக இருந்தாலும், உதயநிதி கட்சி சார்ந்த விஷயங்களில், அரசியலில் பெரிய அளவில் பங்கெடுத்தது இல்லை. திரைப்படங்களில் காட்டி வந்த ஆர்வம், இப்போது அரசியலுக்கு திரும்பியிருக்கிறது. கருணாநிதி உடல்நலக்குறைவால் இருக்கும் சூழலில், ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தவும், ஸ்டாலினுக்கு பிறகான அரசியல் வாரிசாகவும் தன்னை முன்னிலைப்படுத்த உதயநிதி முனைய இது சரியான தருணமாகவே இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு பேசிய உதயநிதி, திமுகவில் இருந்து வரும் நான், சினிமாவுக்கு முன்பு அரசியலில் ஈடுபட்டு வந்தேன், துரைமுருகன் உள்ளிட்ட பலருக்கும் வாக்கு சேகரித்துள்ளேன்,இப்போது தீவிர அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டது என தெரிவித்திருந்தார். உதயநிதியின் கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி ஏற்கனவே பச்சைக் கொடி காட்டி விட்டார். புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், உதயநிதி அரசியலுக்கு வருவது தவறில்லை என்றார்.
உதயநிதியை தொடர்பு கொண்டு பேசியபோது, ”அரசியல் பார்த்து வளர்ந்தவன் நான், கருணாநிதியின் பேரன் அல்லது ஸ்டாலினின் மகன் என்பவை மட்டும் எனக்கான தகுதி அல்ல, அரசியல் பணிகளில் உழைக்க வாய்ப்பு கொடுங்கள், கட்சி வேலையை முதலில் செய்கிறேன், அதே சமயத்தில் தேர்தல் அரசியலில் நிற்க மாட்டேன் என உறுதியாக கூற முடியாது ” என்றார். ஆக, விரைவில் உதநிதியை ஏதோ ஒரு தொகுதியில் வேட்பாளராக பார்க்க முடியும் என கணிக்க முடிந்தது.
இப்படிப்பட்ட சூழலில்தான், திமுகவினர் மத்தியில் ஒரு புதிய தகவல் கசிய விடப்பட்டுள்ளது. விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்படுவார் என்பதே அந்தத் தகவல். ஆனால் இந்தத் தகவல் தவறு என மறுத்துள்ளார் உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான மா.சுப்பிரமணியன்.
தனது கருத்தை வெளிப்படையாகவே உதயநிதி தெரிவித்திருந்த சூழலில், ஸ்டாலின் அது குறித்து எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். இந்நிலையில் பேருந்து கட்டணவு உயர்வுக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தாம்பரத்தில் கலந்து கொண்டார் உதயநிதி. தீவிர அரசியலில் இறங்க உள்ளேன் என கூறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் களத்திற்கு வந்துவிட்டார் உதயநிதி. தொண்டர்களும் உதயநிதியோடு சேர்ந்து கோஷமிட ஆரம்பித்துள்ளனர். உதயநிதி தீவிர அரசியலில் ஈடுபட ஸ்டாலின் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார் என்பதை காட்டுவதாகவே இது அமைந்திருக்கிறது.
உதயநிதியின் இந்த அரசியல் ஆர்வத்தை எப்படி புரிந்து கொள்வது என மூத்த பத்திரிகையாளர் லஷ்மியிடம் கேட்டபோது, "கருணாநிதியின் குடும்பத்தை பொறுத்தவரை அரசியல் அறிந்தவர்களாகவே அங்குள்ள அனைவரும் தங்களை காட்டிக் கொள்கின்றனர். திமுகவின் அதிகார மையமாக ஸ்டாலின் தற்போது விளங்கி வரும் சூழலில், மாற்று அல்லது அடுத்த கட்ட தலைவர் தங்களது குடும்பத்தில் இருந்தே வருவார்கள் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்வாகவே இதனை கருத முடியும். அதே நேரம் அழகிரி தரப்பில் திமுகவில் மீண்டும் யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, தொண்டர்களுக்கு கொடுக்கப்படும் சமிக்ஞையாக கூட இதனை பார்க்க முடிகிறது” என்றார்.
உதயநிதியின் அரசியல் ஆர்வமும், அறிவிப்போடு களமிறங்கிய தருணமும் அதிகார இடத்துக்கான தேடலாகவும், அதிகாரத்துக்கு வர நினைப்பவர்களுக்கான சமிக்ஞையாகவும் எடுத்துக் கொள்ள கூடிய ஒன்றாகவுமே உள்ளது. ஸ்டாலினுக்கு பிறகு நானே என்பதை , ஸ்டாலினின் ஒப்புதலோடு உதயநிதி பெற்றிருக்கிறார். திமுக தொண்டர்கள் இதனை அங்கீகரிப்பார்களா என்பதே இப்போதைய கேள்வி.