சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் இப்போதைய இளசுகளுக்கு ஏதாவது ஒன்று கிடைத்தால் போதும் மீம்ஸ்-களாக போட்டுத் தள்ளிவிடுவார்கள். அந்தவகையில் அவர்களுக்கு தற்போது தீனியாக அமைந்துள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூவின் தெர்மாகோல் திட்டம். இன்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை திறந்தாலே ஒரு பக்கத்தில் 4 மீம்ஸ் வந்துவிடுகிறது. வருகின்ற மீம்ஸ்-கள் எல்லாமே தெர்மாகோலும், செல்லூர் ராஜூ-வும் சார்ந்த மீம்ஸ்கள்தான்.
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வைகை அணையில் நீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்க மிதக்கும் தெர்மாகோல் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். ஆனால் அமைச்சரும் அதிகாரிகளும் அந்த இடத்திலிருந்து புறப்படும் முன்பே காற்றின் வேகத்தால் தெர்மாகோல் அனைத்தும் கரைக்கு அடித்துவரப்பட்டன. திட்டம் தோல்வியடைந்ததோடு விமர்சனங்களையும் சந்தித்தது.
சமூக வலைத்தளங்களில் இத்திட்டத்தை நையாண்டி செய்திருக்கும் பலர், “நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாகோல்.. அப்படின்னா அடுத்த பிளான் சூரியனுக்கு பந்தல் போடுறது” தான என கேட்டிருக்கின்றனர். “பூமிக்கு அருகில் உள்ள கோள் எது என அமைச்சரிடம் கேட்பது போன்றும் அதற்கு அமைச்சர் உடனடியாக தெர்மாகோல்” என கூறுவது போன்றும் கலாய்த்திருக்கின்றனர்.
உங்களை நம்பி ஓட்டு போட்டோமே எங்களைத் தான் சொல்லணும் என புலம்புவது போலும் மீம்ஸ்-கள் வருகின்றன. ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் வச்சீங்களே. அது பறக்கும்னு தெரிஞ்சு அது மேல கல்ல வச்சீங்களா எனவும் நக்கல் அடித்துள்ளனர்.
என்னதான் சமூக வலைத்தளங்கள் கலாய்த்து தள்ளினாலும், அசராத அமைச்சர் செல்லூர் ராஜூ தனது அடுத்த ப்ளானை அறிவித்து விட்டார். அதாவது தெர்மாகோல் திட்டம் தோல்வி அடைந்ததால் அடுத்தபடியாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று ரப்பர் பந்துகளைப் பயன்படுத்தி நீரை ஆவியாகாமல் தடுக்கும் முறையை செயல்படுத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.
தெர்மாகோல் திட்டத்தைக் கலாய்த்துள்ள மீம்ஸ்-களின் சில சாம்பிள்கள் இவை: