சிறப்புக் களம்

2020 வரை சூர்யா கால்ஷீட் டைரி ஃபுல்

2020 வரை சூர்யா கால்ஷீட் டைரி ஃபுல்

webteam

2020 வரை சூர்யா செம பிசி. அதுவரை அவரது கால்ஷீட் புத்தகம் ஃபில் ஆகிவிட்டதாக தெரிகிறது. அவர் தற்போது செல்வராகவன் இயக்கி உள்ள ‘என்ஜிகே’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி உள்ளது. மேலும் யூரோப் நாடுகளில் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆகவே அவர் பேக் டு பேக் செம பிசியாக இருக்கிறார். அவர் 2020 வரை பிசியாக நடிக்க உள்ள படங்கள் என்ன? யார் யாருடன் அவர் இணைய இருக்கிறார்? 

என்ஜிகே

தொடங்கும் போதே தீபாவளி ரிலீஸ் என்று அறிவித்தார்கள். அதைபோலவே இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது இந்தத் திரைப்படம். இதில் சூர்யா, முதன்முறையாக சேகுவேரா லுக்கில் தோன்றி இருக்கிறார். ஆனால் என்ன ரோல்? என்ன கதை பற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் செல்வராகவன் இயக்கி உள்ள திரைப்படம் என்பதால் இசை ரீதியாக இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. சாய் பல்லவி இவருக்கு முதன்முறையாக ஜோடியாக நடித்துள்ளார். பல்லவி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாயகி. ஆகவே அதிக உற்சாகத்தை அவரது ரசிகர்கள் மத்தியில் இப்படம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரகுல் ப்ரீத் சிங்கும் இதில் உள்ளார். 

கே.வி.ஆனந்த்

இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை. இதனை லைகா நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது. லண்டனில் இந்தப் படத்தின் பூஜை தொடங்கியது முதல் பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லை. தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், மோகன்லால், ஆர்யா என பலர் இதில் இணைந்துள்ளதால் ஆடியன்ஸ் மத்தியில் ஆர்வம் அள்ள ஆரம்பித்திருக்கிறது. ஹாரிஸ் இசை, சாயிஷா ஜோடி என பல தகவல்கள் படத்தை கனமாக மாற்றி இருக்கிறது. இந்தப் படமும் 2019 இறுதியில் வெளிவரலாம் என கூறப்படுகிறது. 

இறுதி சுற்று சுதா கொங்கரா

‘இறுதிசுற்று’ இயக்குநருடன் சூர்யா இணைய இருக்கிறார். அந்தப் படத்திற்கான முதற்கட்ட பணிகள் இப்போதே தொடங்கியுள்ளன. ஆனால் இந்தப் படத்தில் சூர்யா இன்னும் கமீட் ஆகவில்லை என பலர் பேசினார்கள். ஆனால் இப்போது கிடைத்துள்ள தகவலின் படி சூர்யா கே.வி.ஆனந்தின் படத்தில் நடித்து முடித்த கையோடு, இதில் இணைய இருக்கிறார் என்கிறது. இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தெரிகிறது. அவரும் அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை 2019 மே மாதம் திரைக்கு கொண்டுவர இயக்குநர் திட்டமிட்டு வருகிறார். 

இதனை அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் சூர்யா இணைகிறார். இவர் ஏற்கெனவே கதை சொல்லி அதனை சூர்யா ஏற்காததால் லேசாக விரிசல் வந்தது. பழைய கசப்பை மறந்து மீண்டும் இருவரும் இணைய உள்ளார்கள். இந்தக் கூட்டணி ஏற்கெனவே பேசப்பட்ட கூட்டணி. பல வெற்றி படங்களை சூர்யாவுக்கு கொடுத்தவர் கெளதம். 2008 ‘வாரணம் ஆயிரம்’ மூலம் தேசிய விருதை தட்டிய கூட்டணி இது.  

இப்படங்களை அடுத்து மீண்டும் தன்னுடைய கமர்ஷியல் இயக்குநர் ஹரியும் சேர்கிறார் சூர்யா. அடுத்து ‘24’ சயின்ஸ் படத்தை தந்த விக்ரம் குமாருடன் இணைய இருக்கிறார் என்பதால் சூர்யாவின் சினிமா கிராஃப் 2020 வரை உச்சத்தில் இருக்க போகிறது.