தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பது தொடர்பாக நீதிமன்றங்கள் அளித்துள்ள உத்தரவுகளுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக சர்ச்சைகள் வெடித்து வருகிறது.
இந்தியாவில் மிகமுக்கியமான பண்டிகளில் ஒன்று தீபாவளி. நாடு முழுவதும் இந்த பண்டிகை மக்களால் நீண்ட காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, பட்டாசு என்றாலே தீபாவளி என்று இருக்கும் நிலையிலும், இந்தியாவில் முக்கிய பல்வேறு கிராமங்களில் சுற்றுச் சூழல் மாசுபாட்டை காக்கும் பொருட்டு பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர். வேடந்தாங்கல் உள்ளிட்ட சரணாலயங்கள் உள்ள பகுதிகளில் பறவைகள் அச்சத்தில் சென்றுவிடாமல் இருக்க பட்டாசு வெடிப்பதை அப்பகுதி மக்கள் தானாக முன்வந்து தவிர்த்து வருகின்றனர்.
இத்தகைய நிலையில், தீபாவளி பண்டிகை நாட்களில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு உச்சநீதிமன்றம் அக்டோபர் 12-ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த ஆண்டும் இதேபோல் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பட்டாசு விற்பனை இல்லாத தீபாவளியை கண்காணித்து அதற்கேற்ப அடுத்த ஆண்டு முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் கூறினர். டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்த பரிசோதனை செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
பஞ்சாப், ஹரியானா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் தீபாவளி அன்று மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை 3 மணி நேரம் தான் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் அக்டோபர் 13-ம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மறுநாள் இந்த உத்தரவு வெளியானது. தன்னார்வலர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் விதிமீறல் நடைபெறாமல் கண்காணிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதனிடையே, சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாட முன் வருமாறு, மகாராஷ்டிரா மக்களுக்கு அம்மாநில சுற்றுச் சூழல் அமைச்சர் ராம்தாஸ் கடம் வேண்டுகோள் விடுத்தார். தீபாவளிக்கு நாம் பட்டாசு வெடிக்கும் போது, சுற்றுச் சூழலை கார்பன்டை-ஆக்ஸைடால் மாசுபடுத்துகிறோம் என்று அவர் கூறினார். இந்த கருத்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, பட்டாசு விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பாரம்பரியமாக தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்கும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு நிலையில், அதற்கு தடை விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தடைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, திடீரென பட்டாசு விற்பனைக்கு தடைவிதித்தால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என அந்த தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றங்களின் உத்தரவு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசின் வேண்டுகோளுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்தது. இது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் மக்கள் வெடித்தெழுவார்கள் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இந்துமத உணர்வுக்கு எதிரான எந்தவொன்றையும் சிவசேனா ஏற்றுக் கொள்ளாது என்று அவர் கூறினார். எத்தனையோ வாகனங்களின் புகையால் ஏற்படும் மாசுக்களை விடவா பட்டாசுகள் வெடிப்பதால் ஆகப்போகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.
பட்டாசு விற்பனை தடைக்கு எதிராக டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும், முந்தைய உத்தரவில் ஏதேனும் மாற்றம் செய்தால் அது அந்த உத்தரவின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானதாக அமையும் என்றும், எனவே பட்டாசு விற்பனை தொடர்பாக எங்கள் உத்தரவில் எந்த திருத்தமும் செய்ய முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள். பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு மீது சிலர் மதச்சாயம் பூசுவது வருத்தம் அளிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆக, சுற்றுச் சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் உள்ள நியாயங்களை முன் வைத்து சிலரும், பாரம்பரியமான பண்டிகையில் இருக்கும் வழக்கத்திற்கு ஆதராக சிலரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்கின்றனர். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு முன்பு பட்டாசு தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து வெடித்து வருகின்றன.