சிறப்புக் களம்

PT Web Explainer: மேகமலை - ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயம் சாத்தியமானது எப்படி?

jagadeesh

தமிழகத்தில் மேகமலை - ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

புலிகளின் பாதுகாப்பிற்காக 1973-இல் ஆரம்பிக்கப்பட்ட புலிகள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நான்கு புலிகள் காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புலிகளை வேட்டையாடுவதைத் தடுக்கவும், அவற்றின் வாழிடங்களைப் பாதுகாப்பதுவுமே இத்திட்டத்தின் தலையாய நோக்கம். தமிழகத்தில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகியவை இருக்கின்றன.

இப்போது மேகமலை - ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இவ்விரண்டு பகுதிகளை ஒன்றிணைத்து புலிகள் சரணாலயமாக மாற்ற பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுந்த நிலையில் இப்போது இவற்றை புலிகள் சரணாலயமாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 1 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பு, 63 வகையான பாலூட்டிகள், 323 பறவையினங்கள் புலிகள் சரணாலயமாக மாற்றுவதால் பாதுகாக்கப்படும். இதன்மூலம் இந்தியாவில் புலிகள் சரணலாயத்தின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

இதில் மேகமலை வன உயிர் காப்பகம் தேனி மாவட்டத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் காப்பகம் மதுரை மற்றும் கேரளாவின் பெரியார் புலிகள் காப்பகத்துடன் ஒட்டி அமைந்துள்ளது. இதனை புலிகள் காப்பகமாக மாற்ற கடந்த 7 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது.

இந்தப் பகுதிகளில் புலிகளின் கால் தடங்கள், டிஎன்ஏ மாதிரிகள் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு 2017 - 2018 ஆம் ஆண்டுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்தப் பகுதிகளில் 14 புலிகள் இருப்பது தெரிய வந்தது. அதில் மூன்று ஆண் புலிகள், 11 பெண் புலிகள் என கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்தத் தகவல்கள் மத்திய அரசுக்கு அனுப்பட்டது.

இதனையெல்லாம் பரீசிலித்த மத்திய அரசு இவற்றை புலிகள் சரணாலயமாக மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தேசியப் புலிகள் பாதுகாப்பு கழகமும் இதற்கு அனுமதியளித்துள்ளது. மேலும் மேகமலை சரணாலயத்தில் புலிகளின் உணவுக்கான தேவையும் கணக்கில் கொள்ளப்பட்டது. அதாவது ஏராளமான காட்டு மாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் இந்த சரணாலயத்தில் இருப்பதால் புலிகளின் உணவு தேவையும் ஈடு செய்யப்படும். ஒரு காட்டுயிர் சரணலாயத்தை புலிகள் காப்பாகமாக மாற்றும்போது இவையெல்லாம் கணக்கில் கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.