சிறப்புக் களம்

கர்நாடக அரசியல் திருப்பங்களும்.. எஸ்.ஆர் பொம்மை வழக்கும்

கர்நாடக அரசியல் திருப்பங்களும்.. எஸ்.ஆர் பொம்மை வழக்கும்

webteam

மாநில அரசுகளைக் கலைக்க மத்திய அரசு பயன்படுத்தி வந்த பிரம்மாஸ்திரமான 356ஆவது பிரிவுக்கு கடிவாளம் போட்ட எஸ்.ஆர் பொம்மை வழக்கு குறித்து இப்போது பார்ப்போம்.

மத்திய அரசு எப்போதெல்லாம் மாநில அரசின் நிலைத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றதோ அப்போதெல்லாம் இந்த வழக்கு நினைவுகூறப்படுகிறது. மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் போதோ, அரசியல் சூழ்நிலை மிக மோசமான நிலைக்கு செல்லும் போதோ மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாநில அரசு கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தப்பட வேண்டிய இந்த 356-வது சட்டப்பிரிவு கடந்த காலங்களில் பலமுறை பல்வேறு அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. மேலும் இச்சட்டம், மத்திய அரசால், தனது அரசியல் எதிராளிகளைப் பழிவாங்கவும், சாதகமான அரசை மாநிலங்களில் அமைக்கவுமே பயன்படுத்தப்பட்டது. 

1988-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ் ஆர் பொம்மை முதல்வராக பொறுப்பேற்றார். லோக் தளம் கட்சியும் அவருக்கு ஆதரவளித்ததை அடுத்து, இரு கட்சிகளும் இணைந்து ஜனதா தளமாக உருவெடுத்தது. ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்த பொம்மைக்கு, மேலும் 13 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். சில நாட்கள் கழித்து கே.ஆர். மொலகேரி என்னும் ஜனதா தள உறுப்பினர் மாநில ஆளுநரை சந்தித்து, தனக்கு 19 உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்ற ஆளுநர் பொம்மை, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்து விட்டதால், அவரது ஆட்சியை கலைத்து விடலாம் என்று குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தார். ஆனால், கே.ஆர். மொலகேரி குறிப்பிட்ட உறுப்பினர்கள், தாங்கள் கட்சி மாறவில்லை என மறுத்தனர்.

இதனையடுத்து, எஸ்.ஆர். பொம்மை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கேட்டார். ஆனால், அதனை கணக்கில் கொள்ளாமல், 1989 ஏப்ரலில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

குடியரசுத்தலைவர் உத்தரவை எதிர்த்து பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதேபோல், நாகலாந்து, மேகாலயா மாநில அரசுகளும் 1988 மற்றும் 1991 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக கலைக்கப்பட்டிருந்தன.

1991-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின் நிகழ்ந்த கலவரங்கள் காரணமான, இந்துத்வா அமைப்புகளை தடை செய்யாததை காரணம் காட்டி பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசத்தின் அரசுகள் கலைக்கப்பட்டன. மேற்கண்ட அனைத்து மாநில அரசுகளும் கலைக்கப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் எஸ்.ஆர் பொம்மையின் வழக்குடன் சேர்க்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 1994-ம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்வு இந்த வழக்கின் மீதான தீர்ப்பை வழங்கியது. கர்நாடக மாநிலத்தில் பொம்மை அரசைக் கலைத்தது செல்லாது என உத்தரவிட்ட நீதிபதிகள், தங்களது தீர்ப்பில் முக்கிய சட்ட விளக்கங்களை அளித்திருந்தனர். அதன்படி, மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, நீதிமன்றத்தின் மேற்பார்வைக்கு உள்பட்ட செயல். தவறான காரணங்களுக்காக மாநில அரசுக் கலைக்கப்பட்டிருந்தால் அதை செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு என்று நீதிபதிகள் கூறினர்.

* அரசியல் சட்ட பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரமானது நிபந்தனைகளுக்கும், மேற்பார்வைக்கும் உள்பட்டது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

* மத்திய அமைச்சரவையானது, மாநில அரசைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு செய்யும் பரிந்துரைகள் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டலும், அப்பரிந்துரையானது எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை ஆராயும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

* அரசியலமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது என்று கருதப்பட்டால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியில் அமர்த்தும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு என்றும் கூறப்பட்டது.

* இந்தியாவின் ஆணிவேராக உள்ள மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு எப்போதும் உண்டு.

இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்திருந்தனர். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினால், 356-வது பிரிவினை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்படும் சம்பவங்கள் வெகுவாக குறைந்ததன. மத்திய அரசு எப்போதெல்லாம் மாநில அரசின் நிலைத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றதோ அப்போதெல்லாம் இந்த வழக்கு நினைவுகூறப்படுகிறது