சிறப்புக் களம்

என்னது! குறட்டைவிட்டால் கண்பார்வை பறிபோகிறதா? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!

Sinekadhara

குறட்டைவிடுதல் என்பது ஒரு மிகச்சாதாரண விஷயம். நாம் எல்லாருமே அதனை ஒரு பிரச்னையாக கருதுவதில்லை. ஆனால், மருத்துவ வல்லுநர்கள் இதனை சுலபமாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என எச்சரிக்கின்றனர். தொடர்ந்து சத்தமாக குறட்டை விடுபவர்கள் கட்டாயம் தங்கள் இணையின் நிம்மதியாக தூக்கத்திற்கு தொந்தரவாகத்தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பிரச்னை அதோடு முடிவதில்லை. குறட்டை பெரும்பாலும் ஸ்லீப் அப்னேயா போன்ற தூக்க பிரச்னைகள் பிரச்னைகளின் அறிகுறியாகத்தான் இருக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். மேலும், நீண்ட நாட்கள் நெடிய குறட்டை விடுவது கண்பார்வையை இழக்க வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

அதிகம் குறட்டை விடுபவர்களுக்கு கண்பார்வை பறிபோகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெய்ஜிங்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆராய்ச்சியில், குறட்டை விடுபவர்களுக்கும், தூக்க பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கும் எதிர்காலத்தில் கண்பார்வை பறிபோகக்கூடும் என எச்சரித்துள்ளனர். இதில் இன்சோம்னியா, குறட்டை அல்லது குறைந்த நேரம் மட்டுமே தூங்குதல் என அனைத்தும் அடக்கம் என்கின்றனர் அவர்கள். மேலும் இது கிளைக்கோமா பிரச்னையுடனும் தொடர்புடையது என்கின்றனர்.

தூக்க பிரச்னை எப்படி கிளைக்கோமா மற்றும் பார்வையிழத்தல் பிரச்னைக்கு வழிவகுக்கிறது?

பார்வை நரம்பு பாதிக்கப்படும் பொதுவான கண் பிரச்னைதான் கிளைக்கோமா. பார்வை நரம்பானது கண்ணை மூளையுடன் இணைக்கிறது. அது சேதம் அடைந்தபின், நீண்ட நேரம் கவனிக்காமல் இருந்தால் பார்வை இழப்பு ஏற்படும். இந்த பிரச்னை பொதுவாக 70 மற்றும் 80 வயதினரை அதிகம் தாக்குமென்பதால், அவர்களுக்கு நல்ல தூக்கத்திற்கான சிகிச்சையை வழங்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

2006 - 2010 வரை நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் 40 - 69 வயதுக்குட்பட்ட 4 லட்சம் பேர் உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கிளைக்கோமா உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறிய, 2021 மார்ச்சில் அவர்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டனர். 11 வருட கால இடைவெளியில் அவர்களில் 8690 பேருக்கு கிளைக்கோமா பிரச்னை இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

நன்றாக தூங்கியவர்களைவிட குறட்டை பிரச்னை மற்றும் பகலில் தூங்கியவர்களுக்கு கிளைக்கோமா பிரச்னை 11 மடங்கு அதிகம் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இன்சோம்னியா மற்றும் குறைந்த நேரம் தூங்கியவர்களுக்கு கிளைக்கோமா பிரச்னையின் பாதிப்பு 13 மடங்கு அதிகம் இருந்ததும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மேலும் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு ஹைபர் டென்ஷன் பிரச்னை இருப்பதும் அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

உயர் ரத்த அழுத்த பிரச்னையானது, இதயம் செயலிழப்பு, பக்கவாதம், மாரடைப்பு மற்றும் தமனி நோய்களுக்கு வழிவகுக்கிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் கண்டறியப்படாத உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இரவில் போதுமான தூக்கம் இல்லாமை மேலும் பல கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.