சிறப்புக் களம்

விரலைக் காட்டி செல்ஃபி எடுக்காதீர்கள்… கைரேகையைத் திருடிவிடுவார்கள்..!

webteam

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ‘விரலைக் காட்டி செல்ஃபி எடுக்காதீர்கள், உங்கள் ரேகையைத் திருடி விடுவார்கள்’ – என்று ஒரு எச்சரிக்கை உலவி வந்தது. ஆனால் அப்போது அதன் நம்பகத் தன்மை என்னவென்று தெரியவில்லை. பெரும்பாலானோர் இதனை வதந்தி என்றே கருதினர்.

இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டியதால், இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவும் இதே எச்சரிக்கையை விடுத்து உள்ளார். அவர் தனது எச்சரிக்கைக்கு உரிய விளக்கமும் கொடுத்துள்ளார்.

கைவிரல்கள் தெரியும்படியான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் போது, அவற்றில் உள்ள விரல்களை ஜூம் செய்து, அவற்றில் உள்ள ரேகைகளை நகலெடுக்க முடியும் எனவும், தவறு நடக்கும் இடங்களில் காவல்துறையை திசை திருப்ப அந்த ரேகைகளை விட்டுச் செல்ல வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறி உள்ளார். இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் மத்தியில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மத்திய அரசோ சமூக வலைத்தளங்களோ இதுபற்றி எதுவும் கூறவில்லை. ரூபாவின் எச்சரிக்கைக்கும் வரவேற்பும் விமர்சனங்களும் மாறிமாறியே வருகின்றன.