அரசு வேலைக்காக காத்திருந்து காத்திருந்து கிடைக்காது என தெரிந்தப் பின் 52 வயதில் அதிர்ச்சியில் உயிரிழந்தார் பட்டதாரி ஆசிரியர் வீரமணி. என்னதான் பெரிய படிப்பு படித்தாலும் அரசு வேலை என்பது ஏழை மக்களின் நம்பிக்கையான வாழ்வாதாரம் அதன் கனவுகளின் அடிப்படையிலே குக்கிராமத்தில் பிறந்தாலும் கல்வியில் தகுதி தேர்ச்சி என்பதில் இன்றளவும் முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றார்கள் அரசு வேலைக்காக.
அந்த வகையில் புதுச்சேரியை அடுத்துள்ள தைலாபுரம் என்ற கிராமத்தில் மிகவும் வருமையான குடும்பத்தில் 6 தங்கைகள் ஒரு தம்பிக்கு அண்ணனாக மூத்தமகனாக பிறந்தவர் வீரமணி, வயதான தாய் தந்தை மற்றும் திருமண வயதை கடந்த தங்கைகளுக்கும், ஒரு தம்பிக்கும் இவரே குடும்பதலைவராக இருந்து வந்தார்.
அந்த கிராமத்தில் அதிகம் படித்தவர் என்று புகழுடன் மூன்று எம்.ஏ.பி.எட் பட்டம் பெற்றார். இவரது ஆசை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்பது தான். அதற்காக அரசு வேலைக்கு தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும் நம்பிக்கையில் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் ஆனால் அரசு வேலை இவருக்கு கிடைக்காது என்ற அச்சத்தில் இவரது மனைவி சிறிது காலத்திலே பிரிந்து சென்று விட்டார். இருப்பினும் கவலை கொள்ளாமல் 6 தங்கைகளையும் ஒரு தம்பியையும் எப்படியாவது முன்னேற்றி விட வேண்டும் என்று துடிப்புடன் தொடர்ந்து அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அதே நேரம் குடும்பத்தை நடத்த வேண்டி புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு நடத்திய ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதினார். அப்போது அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில் தேசிய கீதம் முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதற்கு வங்காள மொழி என்று சரியான பதிலை எழுதினார். ஆனால் தேர்வுக்கான அரசு பதிலில் சமஸ்கிருதம் என்று கூறி இவரது பதில் தவறு என்று கூறி ஒரு மதிப்பெண்ணை வழங்கவில்லை. ஒரு மதிப்பெண் குறைந்ததால் இவருக்கு கிடைக்க இருந்த ஆசிரியர் பணி கிடைக்கவில்லை.
சரியான பதில் எழுதியிருந்தும் அரசு தன்னை ஏமாற்றி விட்டதே என நியாம் கேட்டு நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறினார். சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கி இவர் எழுதிய விடை சரியே என்றும் 4 வாரத்தில் இவருக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என கட்ந்த 2017 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியில் திழைத்த வீரமணி தனது தங்கைகள் மற்றும் தம்பியிடம் இத்தனை நாள் பட்ட கஷ்டம் தீர்ந்து விட்டது. நீதிமன்ற உத்தரவால் 2013ல் இருந்தே கணக்கிட்டு சம்பளம் கிடைக்கும் தங்கள் வீட்டில் தங்கைகளுக்கு சுப நிகழ்ச்சி நடத்தி விடாலாம் என்று கூறி வந்தார். 4 வாரமும் கடந்தது அரசின் அறிவிப்பு வரும் வரும் என்று காத்திருந்தார் வீரமணி. இந்த நிலையில் தான் நேற்று காலை பொழுது விடிந்தது. தினசரி பத்திரிக்கைகளை புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்த வீரமணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவரைப்போல் சரியான பதில் எழுதிய பலரும் நீதிமன்றத்திற்கு சென்று பணியானை வழங்க உத்தரவு பெற்றிருந்தார்கள் ஆகவே இதுபோன்று உத்தரவு பெற்றவர்களுக்கும் காத்திருப்பு பட்டியல் படியே பணி வழங்கப்படும் என்ற செய்தி வந்தது.
இதைப்படித்து பார்த்த வீராமணிக்கு உடலெல்லாம் வியர்த்துக்கொட்டியது அருகில் உள்ள சுவற்றில் அப்படியே சாய்ந்தபடி தம்பி பாலமுருகணை அழைத்து தம்பி எப்படியாவது வேலை கிடைக்கும் என்று ஆசைப்பட்டேன்ட ஆனால் காத்திருப்பு பட்டியல் படித்தான் கிடக்குமாம் இப்போதே எனக்கு வயது 52 ஆகிவிட்டது இனி எப்போது வேலை கிடைத்து உங்களை எல்லாம் கரை சேர்க்க போகின்றேன் எனக் கூறியபடி மயக்கமடைந்தார்.
இதனையடுத்து அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இவர் ஏற்கெனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் கூறினார்கள். இதனால் வீரமணி குடும்பத்தினர் உள்ளிட்ட அந்த ஊரே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அரசின் அலட்சியத்தாலும் அலைக்கழிப்பாலும் அரசு வேலை என்ற கனவில் இருந்த வீரமணியின் குடும்பம் நிலைகுலைந்து விட்டது. வீரமணியை நம்பியிருந்த வயதான தாய் தந்தை மற்றும் திருமணம் ஆகாத 6 முதிர்கன்னிகள் அவரது தம்பி ஆகியோரின் வாழ்க்கை கேள்விக்குறியாவிட்டது. அரசு வேலை என்ற கனவிலே உயிரிழந்த வீரமணியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை தரவேண்டும் என்பது அந்த ஊர் மக்களின் வேண்டுகோளாக உள்ளது.