சிறப்புக் களம்

இரவெல்லாம் உங்களுக்கு தூக்கமில்லையா? உங்களுக்கு இந்த பிரச்னைகள் வரலாம்!

இரவெல்லாம் உங்களுக்கு தூக்கமில்லையா? உங்களுக்கு இந்த பிரச்னைகள் வரலாம்!

Sinekadhara

ஒரு மனிதனுக்கு தூக்கம் மிகமிக இன்றியமையாதது. உடல் சீராக இயங்கவும், போதிய எனர்ஜி கிடைக்கவும் உடலுக்கு போதுமான ஓய்வும் தூக்கத்தின்மூலமே கிடைக்கிறது. ஆனால் ஒருவருக்கு தினசரி 8 மணிநேர தூக்கம் என்பது கிடைப்பதில்லை. போதிய தூக்கமின்மை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

உடலுக்கு சீராக இயங்க உடலுக்கு எப்படி உணவும், ஆக்சிஜனும் தேவையோ அதே அளவுக்கு தூக்கமும் கிடைப்பது அவசியம். நன்றாக தூங்கும்போது உடலின் என்னென்ன ரசாயன மாற்றங்கள் நிகழவேண்டுமோ அவை அனைத்தும் சீராக நடந்து பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு சமநிலையுடன் இயங்கும். இதனால் மூளையும் சிறப்பாக செயல்படும். போதிய தூக்கமின்மையால் என்னென்ன மாதிரியான நாள்பட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து பார்க்கலாம்.

1. மனநலக் கோளாறுகள்

இரவில் போதிய தூக்கம் கிடைக்காதபோது பகல் முழுதும் ஒருவித எரிச்சல் மற்றும் அழுத்தம் உருவாகும். ஆனால் நீண்டகால தூக்க இழப்பு மன அழுத்தம் மற்றும் பொதுவான உற்சாகமின்மை போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மெலட்டோனின் என்ற ஹார்மோன் தூக்க சுழற்சி மற்றும் மனநலம் இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் ஒழுங்கற்ற தூக்கமுறையை பின்பற்றுவர். ஆரோக்கியமாக உள்ள நபர்களை விட மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மை உள்ளவர்களுக்கு மெலட்டோனின் அளவு குறைவாகவே சுரக்கும்.

2. நாள்பட்ட இதய நோய்கள்

போதிய தூக்கமின்மை பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையானது ரத்த ஓட்ட அமைப்பைக் கட்டுப்படுத்தும் மூளைப் பகுதிகளைத் தொந்தரவு செய்யலாம் அல்லது ரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

3. மூளை இயக்கத்தில் குழப்பம்

அதிக நாட்கள் மூளை போதுமான அளவு ஓய்வெடுக்க முடியாதபோது மன நலனானது தீவிரமாக மோசமடையலாம். பிரச்னைகளைத் தீர்ப்பது, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது, முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறது. போதிய தூக்கம் இல்லாதபோது உடல் சமநிலையை இழப்பதுடன், அனிச்சை செயல்களும் அடிக்கடி ஏற்படும். இதன் விளைவாக, காயம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாகன விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று தூக்கமின்மை.

4. உடற்பருமன்

தூக்கமின்மையால் பெரும்பாலனவர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று உடற்பருமன். போதுமான அளவு தூங்காதபோது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிக அளவில் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் கவலை, அழுத்தம் மற்றும் விரக்தி போன்ற உணர்வுகள் மேலோங்கி உணவு பழக்கவழக்கங்களிலும் மாற்றம் ஏற்படுகிறது. வயிற்றில் சுரக்கும் மற்றொரு ஹார்மோனான கிரெலினும் தூக்கத்துடன் தொடர்புடையது. இதனால்தான் அதிக பசி உணர்வு ஏற்படுகிறது.

5. நோயெதிர்ப்பு சக்தி குறையும்

போதுமான தூக்கத்தால் உடலுக்கு ஓய்வு கிடைக்கும்போது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சீராக இயங்கும். நீண்ட நாட்கள் போதிய தூக்கம் இல்லாவிட்டால் அதனால் நாள்பட்ட மன அழுத்தம் உருவாகும். இதனால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சரிவர இயங்காது. இதனால் சளி மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுகள் எளிதில் பரவும்.

6. உயர் ரத்த அழுத்தம்

ஒருநாளில் 5 -6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. போதுமான தூக்கம் கிடைக்காவிட்டால் அது உடலின் அழுத்தத்தை அதிகப்படுத்தும். தூக்கமானது உடலில் அழுத்தத்தை உண்டுபண்ணும் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. நீண்ட நாட்கள் சரியாக தூங்காதபோது அது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், இதயத்துடிப்பு அதிகரிப்பு மற்றும் அழற்சி போன்ற பிரச்னைகளையும் தூண்டும். மேலும் இதயமானது அனைத்து செயல்களுக்கும் மிகவும் கஷ்டப்படும்.

எனவே இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க தினசரி போதுமான தூக்கம் மற்றும் ஓய்வை உடலுக்கு கொடுப்பது மிகமிக அவசியம். இது பல்வேறு உடல்நல பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.