சிறப்புக் களம்

‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்

‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்

webteam

தமிழ் சினிமா எத்தனையோ பின்னணி பாடகர்களை கடந்து வந்துவிட்டது. ஆனால் இந்தத் திரை இசை தேரை முதலில் வடம் பிடித்து இழுத்தவர் திருச்சி லோகநாதன் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது? அவரை தெரியாவிட்டால் என்ன? அவரது குரலை இந்தத் தமிழ் உலகம் மறக்கவில்லை. இன்றும் அவரது குரல் ஒவ்வொரு வீட்டு மணவறையிலும் மந்திரம் போல ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

இப்படி அவர் பாடி, சாகா வரம் பெற்ற பாடல்தான் ‘புருஷன் வீட்டு வாழப்போகும் பெண்ணே.. தங்கச்சி கண்ணே.. சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே’. சுந்தரம் வாத்தியார் அவர்களின் வரிகளில் கடமை தவறாத அண்ணன் தனது தங்கைக்கு தரும் அறிவுரைகள் அடங்கியதாக இந்தப் பாடல் வெளிப்பட்டது. 

பிறகான காலங்களில் இந்தப் பாடலின் பெருமையை விளக்கி, திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு உயர்புகழை எட்டியது என்பதும் உண்மை. இந்தப் பாடலில் வெறும் அறிவுரை மட்டும் அடங்கி இருக்கிறது என அசட்டையாக நினைத்துவிட முடியாது. இதில் காலம் காலமாக காட்டி காப்பாற்றப்பட்டு வந்த தமிழர்களின் அறவுரைகளும் அடங்கி இருந்தது என்பதே உண்மை.

இன்றும் நம்மை திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் இந்தப் பாடலை திருச்சி லோகநாதன் பாடி இன்றைக்கு 60 வருடங்கள் கடந்தோடி விட்டன. அதாவது 1958ம் ஆண்டு டி.எஸ். துரைராஜ் இயக்கத்தில் வெளியான ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் அன்றைக்கு பட்டித் தொட்டி எங்கும் போய் முட்டியது. இதையும் மீறி ஒவ்வொரு திருமண வீட்டிலும் மங்கல இசையாக நின்று நிலைத்தது. இந்தப் பாடலை பாடிய போது திருச்சி லோகநாதனுக்கு 34 வயது. 

அதாவது 1924 ஆம் ஆண்டு  ஜூலை 24ம் நாள் பிறந்த திருச்சி லோகநாதன் தேர்ந்த இசை ஞானம் பெற்ற பிறகான காலங்களில் பாடியுள்ளார். இவரது முதல் திரை இசை பிரவேசம் 1947ல் நடந்தது. தனது 23 வயதில் திரை இசை உலகில் முதல் பின்னணி பாடகராக அவர் கால் பதித்தார். அன்று முதல் அவரது குரலைக் கேட்க மக்கள் தவம் கிடந்தனர். 

ஜூபிட்டர் பிக்ச்சர் தயாரிப்பில் வெளியான ‘ராஜகுமாரி’தான் தமிழ் சினிமாவில் முதல் பின்னணி குரலை பயன்படுத்திய திரைப்படம். இந்தப் படத்தினை ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கி இருந்தார். கதை, திரைக்கதை, சினாரியோ அண்ட் டைரக்‌ஷன் என்று டைட்டிலுடன் இயக்குநர் பெயர் இடம் பெற்றிருந்தது. 

முதல் பின்னணிக் குரலை திரை இசைக்கு வழங்கியவர் திருச்சி லோகநாதன்தான் என்றால் திரையில் முதல் பின்னணி பாடலுக்கு வாயசைத்தவர் எம்.என்.நம்பியார். இந்தப் படத்தில் ‘காசினிமேல் நாங்கள்’ என்ற பாடலுக்கு நம்பியார்தான் வாயசைத்து நடித்திருந்தார். அவருக்கு லோகநாதன் தன் குரலை கடன் வழங்கியிருந்தார். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் வெளியான திரை இசை உலக்கில் ஒரு திருப்புமுனை. 

அதுமட்டுமல்ல; இந்தப் படம் பல விஷயங்களை சரித்திரத்தில் பதிய வைத்துள்ளது. இந்தப் படத்தின் உதவி ஆசிரியராக தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. ஆனால் திரைக்கதையை எழுதிய மு.கருணாநிதியின் பெயர் உரிய முறையில் குறிப்பிடப்படவில்லை என்ற சர்ச்சையையும் இந்தப் படம் அன்றைக்கு சம்பாதித்திருந்தது.  

இப்படத்தின் டைட்டில் கார்டில் எம்.ஜி. ராமச்சந்திரர் என அறிமுகம் செய்யப்படும் நடிகர் பின்னாளில் தமிழ் சினிமாவில் அழியாப் புகழை ஈட்டி எம்.ஜி.ராமச்சந்திரன் ஆனார். 

‘ராஜகுமாரி’ மூலம் திரை உலகில் பின்னணி பாடகர் வாழ்க்கை தொடங்கிய திருச்சி லோகநாதன், தனது இறுதி காலம் வரை கோவிந்தராஜூலு நாயுடு, வேதா, டி.ஜி. லிங்கப்பா, எஸ்.வி.வெங்கட்ராமன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, டி.ஆர்.ராமநாதன், தக்ஷ்ணாமூர்த்தி, கண்டசாலா, ஏ.எம்.ராஜா, ஜி.ராமநாதன் என்று ஏகப்பட்ட இசையமைப்பாளர்களின் இசையில் இடைவிடாமல் பாடினார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருண்டது இவரது திரை இசைச்சக்கரம். மக்கள் லோகநாதன் என்றால் மயக்கும் அளவுக்கு தன் ஆளுமையை கூட்டினார் லோகநாதன். 

சம்பள விவகாரத்தில் மிகவும் கறாரான ஆள் என கணிக்கப்பட்ட லோகநாதன் திரை வாழ்வில், சில சண்டைகளும் நடந்தேறி உள்ளன. சிவாஜி கணேசனின் ‘தூக்குத்தூக்கி’படத்திற்கு மொத்தம் எட்டு பாடல்களை பாடித் தரும்படி கேட்ட போது ஒரு பாடலுக்கு 500 ரூபாய் சம்பளம் கேட்டதாக ஒரு கதை உண்டு. 1954ல் 500 ரூபாய் என்பது பெரிய பணம். சம்பளத்தை குறைக்க கேட்ட போது, ‘மதுரையில் இருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார். அவரை பாடி சொல்லுங்க’ என லோகநாதன் சொன்னதாக ஒரு சம்பவத்தை சிலர் எழுதி இருக்கிறார்கள். இவர் சொன்ன மதுரைக்காரர் டி.எம்.செளந்தரராஜன்தான் என்பது உபரித் தகவல்.

லோகநாதனின் ஒவ்வொரு பாடலில் ஒலித்தது வெறும் வார்த்தைகள் அல்ல; வாழ்வின் தத்துவமிக்க அனுபவங்கள். ‘மந்திரிகுமாரி’யில் கவி கா.மு.ஷெரீப் அவர்களின் வரிகளில் வெளிப்பட்ட ‘வாராய்..நீ வாராய்’ பாடல் லோகநாதனுக்கு சாகத வரத்தை வாங்கித் தந்தது. 

பொதுவாக லோகநாதனின் பாடல் களம் நையாண்டி தனம் நிரம்பியது. மேற்கொண்டு காதல் ரசம் தவழும் வரிகளையும், சோகம் பிழியும் வரிகளையும் அவர்  பாடியுள்ளார். ‘சின்னக்குட்டி நாத்தனா, சில்லறையை மாத்தினா..குனங்குடி போற வண்டியில குடும்பத்தையே ஏத்தனா’ பாடல் அதற்கு சரியான சாட்சி. 

‘ஆரவல்லி’ படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் வரிகளில் ஜி.ராமநாதன் இசையில் வெளிப்பட்ட இந்தப் பாடல் அன்றைக்கு குத்துப்பாட்டு கலாச்சாரத்தில் கரைபுரள செய்தது. அதே போலதான் ‘கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல’ பாடலும். மாதக் கடைசியில் மனிதன் சந்திக்கும் பொருளாதார சிக்கலை இப்பாடல் சிறப்பாக வெளியே சொன்னது. 


‘இரும்புத்திரை’யில் வெளியான இந்தப் பாடல் இன்று வரை ஒரு மாஸ்டர் பீஸ். ‘நாலு வேலி நிலம்’ படத்தில் கு.ம.பாலசுப்பிரமணியன் வரிகளில், ‘ஊரார் உறங்கையிலே.. உற்றாரும் உறங்கையிலே.. நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலே’ என்ற பாடலை இன்று மணிக்கணக்காக கேட்டாலும் மயக்கம் விட்டு அகலாது. கே.வி. மகாதேவனின் இசையில் இந்தப் பாடல் உருவானது. இப்படி ‘ஆசையே அலைபோல’,‘உலவும் தென்றல் காற்றினிலே’ எனப் பட்டியல்கள் பல நீளும்.  

அதிகம் ரசிகர்களை லோகநாதனுக்கு பெற்று தந்த படம் ‘மாயா பஜார்’. ரங்காராவ் நடிப்பில் உருவான ‘கல்யாண சமயல் சாதம்’ பாடலை இவர்தான் பாடி கொடுத்திருந்தார். இவரது குரலுக்கு ஏற்ப ரங்காராவின் அங்க அசைப்பு உச்சம் பெற்றிருந்தது.
  
லோகநாதனுடன் இணைந்து அதிகம் டுயட் பாடியவர்கள் இருவர். ஜிக்கியும் லீலாவும்தான் அவர்கள். இவர்களுடன் சேர்ந்து பாடினால் பாடல் சக்சஸ் எனக் கூறும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஆழப்பதிந்தார் லோகநாதன். பி.சுசீலாவுடன் இவர் பாடிய ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ பாடல் மயக்கத்தின் உச்சத்திற்கு கொண்டு போய்விடும். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ‘கண்களும் கவி பாடுதே’ பாடலை சீர்காழி கோவிந்தராஜனுடன் சேர்ந்து லோகநாதன் பாடி இருந்தார். சங்கீத சாம்ராஜ்யத்தில் தனி ஆவணம் என இந்தப் பாடலை சொல்லலாம். 

1955 ஆம் ஆண்டு வெளியான ‘நாஸ்திகன்’ படத்தில் தேசப் பிரிவினை குறித்து இவர் பாடிய ‘மாநிலம் மேல் மானிடரால் என்ன மாறுதல் பாரய்யா’ என்ற பாடல் கேட்பவர் நெஞ்சம் உறைந்து போய்விடும். கூட்டம் கூட்டமாக மக்கள் மதங்களின் கோரத்தாண்டவத்தால் எப்படி அவதிக்குள்ளாகிறது எனக் காட்சிக்கு காட்சி கண்ணீர் வடிக்க வைக்கும் இந்தப் பாடலை இளம் தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. 

லோகநாதனின் குரல் அதிகம் சிவாஜி கணேசனுக்கும், எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் பொருந்தி வருவதாக அன்றைய ரசிகர்கள் நம்பினர். அதில் உண்மையும் இருக்கவே செய்தது. ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் பாரதியாரின் வரிகளில் உருவான ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ பாடலை லோகநாதனை விட வேறு எவராலும் அன்றைக்கு உயிர்கொடுத்திருக்க முடியாது என பலரும் புகழ்ந்தது தனிக் கதை. இப்படி லோகநாதன் தொட்டது எல்லாம் துலங்கியது.  

இப்படி திரை இசை பின்னணி உலகம் இருக்கும் வரை அழியாத புகழை ஈட்டிய லோகநாதனின், தந்தை பெயர் சுப்பிரமணியன். இவர் ஒரு பொற்கொல்லர். காவிரி கரையையும் கர்நாடக இசையும் பிரிக்கவே முடியாது. காவிரி கரையோர பகுதி சங்கீதம் பாய்ந்த மண் என்பார்கள். அந்த திருச்சி நதிக்கரையில் பிறந்த லோகநாதன், சிறுவயதிலேயே முறைப்படி பாரம்பரிய இசை பயின்றார். நடராஜன் தான் அவரது ஆஸ்தான். 

அதன் பிறகு சுதந்திர தாகம் அவரை ஆட்கொண்டது. தேசிய உணர்ச்சி, இசை பயிற்சி, திரை இசை ஈர்ப்பு என பல வழிகளில் லோகநாதனின் மன உலகம் பயணிக்கத் தொடங்கியது. பிறகு நகைச்சிவை நடிகை சி.டி.ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி மணந்த இவருக்கு டி.எல்.மகாராஜன், தீபன் சக்ரவர்த்தி, தியாகராஜன் என மூன்று பிள்ளைகள். ‘பூங்கதவே தாழ் திறவாய்’ பாடலை பாடிய தீபன் சக்ரவர்த்தி இவரது மகன்தான்.  

இனிக்க இனிக்க திரை இசை பாடல்களை வாரி வழங்கிய திருச்சி லோகநாதனின் நினைவு தினம் இன்று. 1989 நவம்பர் 17 இந்த உலகை விட்டு பிரிந்த அவரது புகழ், அவரது பாடல் வரிகளை போலவே ‘உலவும் தென்றல் காற்றினிலே’ ஒலித்துக் கொண்டே இருக்கிறது.