பெட்ரோல், டீசல் விலை ஜூலை 16 முதல் நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
இதற்காக புதுச்சேரி, சண்டிகர், ஜாம்ஷெட்பூர், உதய்பூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 5 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வு வெற்றியடைந்ததை ஒட்டி, பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் தினசரி மாற்றியமைக்கப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாதம் இருமுறை மாற்றி அமைத்து வந்தன. நாடு முழுவதும் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமாக 54,000 பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரங்களின்படி அவற்றின் உள்ளூர் சந்தை விலை நிர்ணயம் அமையும். தற்போது தினசரி விலை நிர்ணய முறை அமலாக இருப்பதால் பெட்ரோல் பங்குக்கு செல்லும் முன் நீங்கள் சில அடிப்படை தகவல்களை அறிந்துகொள்வது அவசியம்.
காலை 6 மணிக்கு மாறும் விலை:
முன்னதாக நள்ளிரவு 12 மணிக்கு நிர்ணயிக்கப்பட்டுவந்த பெட்ரோல், டீசல் விலை நாளை (ஜூன் 16) முதல் தினசரி காலை 6 மணிக்கு மாற்றியமைக்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர் அன்றைய தினத்துக்கான பெட்ரோல், டீசல் விலையினை காலையிலேயே அறிந்துகொள்ளலாம்.
இன்றைய விலையை எப்படி அறிந்துகொள்வது?:
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை அறிந்துகொள்ள பல்வேறு வழிமுறைகளை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன. எஸ்எம்எஸ் அல்லது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் விலையை உடனடியாக அறிந்துகொள்ள முடியும். எஸ்எம்எஸ் மூலமாக அறிந்துகொள்ள உங்கள் செல்போனில் RSP < SPACE > பெட்ரொல் பங்க் டீலர் குறியீடு (DEALER CODE) ஆகியவற்றை டைப் செய்து 92249-92249 என்ற எண்ணுக்கு அனுப்பி பெட்ரோல், டீசல் விலையை அறிந்துகொள்ள முடியும். அதேபோல, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் Fuel@IOC என்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் விலை நிலவரத்தை அப்டேட் செய்து கொள்ளலாம். டீலர் குறியீடு ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் பெரிய எழுத்துகளில் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைமாற்றம் எப்படி இருக்கும்?:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன. அதேநேரம், சர்வதேச சந்தையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாத நிலையில், தினசரி மாற்றமும் பெரிய அளவில் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. சந்தை மாற்றங்களால் ஏற்படும் பயன்களில் அதிகப்படியானவற்றை நுகர்வோருக்கு அளிக்கும் வகையிலேயே இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.