‘தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை மாற்றவேண்டும்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூவும், ’இல்லை… இல்லை… திருச்சியைத்தான் இரண்டாவது தலைநகராக்கவேண்டும்’ என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் மாறி மாறி கருத்து யுத்தம் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில், தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனிடம் இதுகுறித்து பேசினோம்.
“தலைநகர் சென்னையில் மட்டுமே அதிகாரப் பரவல் இருக்கக்கூடாது. அதேநேரத்தில், சென்னையின் குவியலை இன்னொரு இடத்திலும் குவிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக எல்லா மாவட்டத்திலும் அதிகாரப் பரவல் இருக்கவேண்டும். திருச்சி, மதுரையை தலைநகராக்க வேண்டும் என்றில்லாமல் பல்வேறு இடங்களில் தலைமை அலுவலங்களை மாற்றலாம். பரவலாக்கலாம். இரண்டாம் தலைநகர் உருவாக்கினால் சென்னையைப் போன்றே மாசுபாடுதான் அதிகரிக்கும். வேண்டுமென்றால் பரவலாக்கலாம்.
மற்றபடி, இரண்டாம் தலைநகர் குறித்த கருத்துகளை அதிமுக அமைச்சர்களே வெளிப்படுத்துவது சுயநலத்திற்காகத்தான். அவர்களுக்கு மக்கள்மீதோ பொது நலத்தின்மீதோ அக்கறையெல்லாம் கிடையாது. 2021 தேர்தல்தான் அவர்களின் நோக்கம். தேர்தல் நேரத்தில் மக்களுக்கு என்ன சொன்னால் மகிழ்வார்கள் ஓட்டு வாங்குவதற்காக அமைச்சர்கள் போட்டியில் இறங்கி இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலோ மக்கள் பிரச்சனையிலோ அவர்கள் பங்கேற்பதில்லை. மக்களுக்கு பிடித்த மாதிரி பேசி எப்படியாவது ஓட்டு வாங்கிவிடமாட்டோமா என்று நினைக்கிறார்கள். அதில், போட்டிப்போட்டுக்கொண்டு தங்கள் மாவட்டங்களைச் சொல்கிறார்கள். அவ்வளவுதான்” என்கிறார், அவர்.