தமிழ் கடவுள் முருகன் அவமதிக்கப்பட்டதாக கூறி தமிழக பா.ஜ.கவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ’வேல்’ போராட்டத்தை முன்னெடுத்தனர். முருகன் புகைப்படத்தை பூஜை அறையில் வைக்காமல் ஹால், வீட்டிற்கு வெளியில் வைத்து கும்பிடுவது, கந்த சஷ்டிக் கவசத்தை சமையல் கட்டில் வைத்து படிப்பது என்று புதியப் புதிய இடங்களை கண்டுபிடித்து கும்பிடுவதாகக் கூறி தமிழக பா.ஜ.கவினரை வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அதில், குறிப்பாக, தமிழக பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி ராகவனுன் கையில் வேல் வைத்துக்கொண்டு நின்றிருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில், கே. டி ராகவனிடம் பேசினோம்,
முருகன் படத்தை சமையல்கட்டு, ஹால், வாசல் என பல்வேறு இடங்களில் வைத்து வணங்குகிறீர்களே? பூஜை அறையில் வைத்து வணங்கக்கூடாதவரா முருகன்?
இது தவறான பார்வை. எங்கள் வீட்டு பூஜை அறையில் முருகர் இருக்கிறார். இப்போது, நான் ஒரு ரெஸ்ட்டாரெண்டில் அமர்ந்திருக்கிறேன். இங்கிருந்தபடியே, வேண்டுமென்றால் வீட்டில் சொல்லி பூஜை அறையிலுள்ள முருகர் புகைப்படத்தை போட்டோ எடுத்து அனுப்பச் சொல்கிறேன். எங்கள் வீட்டு பூஜை அறையில் முருகர் நல்லாவே இருக்கிறார். என்னுடைய மனைவி உட்பட குடும்பமே முருகருக்கான பூஜைகளை தினமும் நடத்திகொண்டுதான் வருகிறோம். பொதுமக்கள் எல்லோரையும் உள்ளே அழைத்து பூஜை செய்ய இடம் இருக்காது என்பதால்தான் எங்கள் கட்சியினர் முருகரை வாசலிலும் தெருவிலும் வைத்து கும்பிடுகிறார்கள். அவ்வளவுதான். அதனால், முருகரை ரோட்டில் கொண்டு வந்துவிட்டோம் என்று ஆகிவிடாது. பக்தி இல்லை என்று அர்த்தம் கிடையாது. முருகர் மீது எங்களுக்குத்தான் அதிக மரியாதை உள்ளது. அதனால்தான், இப்போதுவரை முருகரை உயர்த்திப் பிடிக்கிறோம். ஆனால், தமிழ் கடவுள் முருகரை கொச்சைப்படுத்த ஒருகூட்டமே இறங்கி வேலை செய்கிறது. கந்த சஷ்டிக்கவசத்தை கொச்சைப்படுத்தியவர்களை கண்டிக்க துப்பில்லாதவர்கள்தான், முருகரை வாசலில் வைத்துவிட்டார்கள், ஹாலில் வைத்துவிட்டார்கள் என்கிறார்கள். எங்கள் கடவுள் முருகர்தான்.
கடவுள் முருகனையே பாஜகவினர் வெளியில் வைத்து அவமானப்படுத்தும்போது, பாஜக தலைவர் முருகனை எப்படி மதிப்பார்கள்? என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே?
தமிழக பாஜகவுக்கு முதல் உட்சப்பட்ச அதிகாரம் கொண்டவர் எங்கள் மாநிலத் தலைவர் முருகன்தான். அவரது வழிகாட்டுதலால் தமிழக பாஜக நன்றாக சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. தலைவர் முருகனின் தலைமையில் தமிழ் கடவுள் முருகருக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் முருகரை அவமானப்படுத்திவிட்டோம் என்று உருகுபவர்கள், கந்த சஷ்டிக் கவசம் பிரச்சனைக்கு கண்டித்தார்களா? குரல் கொடுத்தார்களா? ஏன் செய்யவில்லை?அப்போது, மட்டும் அமைதிகாத்துவிட்டு, பக்தியோடு வணங்குபவர்களையும் குறைசொல்கிறார்கள். முருகர் பிரச்சனையில் இரட்டைவேடம் போடுகிறார்கள். முருகன் எங்களுக்குத் தலைவர்: முருகர் எங்களுக்கு கடவுள்.
ஏற்கனவே, தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்புக்கு வந்த முதல் பட்டியல் இனத்தவர் டாக்டர். கிருபாநிதியை பாஜக தலைவர் ஒருவர் சாதி ரீதியாக சொல்லி அடித்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளதே?
அப்படி அடித்து எந்த காவல்நிலையத்தில் புகார் உள்ளது? கிருபாநிதி இப்போது உயிருடன் இல்லை. அப்படி இருந்தால் இந்நேரம் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அவரே பதில் சொல்லியிருப்பார்.
டாக்டர் கிருபாநிதி
அதேபோல, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலித் என்பதாலேயே கோயிலுக்குள் விடவில்லையே? பா.ஜ.க பட்டியல் இனத்தவர்களை உயர் பதவிகளில் அமர்த்தி உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற தொடர்ச்சியான குற்றச்சாட்டு உள்ளதே?
பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவித்தை நாங்கள் ஜனாதிபதி ஆக்கியிருக்கிறோம். ஆனால், இதற்கு பின்னாடி இருந்து தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் தி.மு.க தன்னுடைய தலைவர் பதவியை ஏன் பட்டியலினத்தவருக்கு கொடுக்கவில்லை? ஆ.ராசா தி.மு.க தலைவராவதற்கு தகுதி இல்லாதவரா? அவரை திமுகவின் தலைவர் ஆக்கியிருக்கலாமே? ஏன் உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்? அதனால், இவர்கள் எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கவேண்டாம். பா.ஜ.க யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ சரியாகக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. பட்டியல் இனத்தவர் என்பதால் மதிக்கவில்லை என்பதெல்லாம் பொய்யான கட்டுக்கதைகள்.
அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் என்று அமைச்சர்கள் கூறிவருகிறார்களே?
அ.தி.மு.கவினருக்கு தங்கள் தலைமை யார் என்பதை முடிவு செய்யும் உரிமை உள்ளது. அதனால், நாம் இதில் கருத்துச் சொல்ல எதுவுமில்லை. அடுத்தக் கட்சியின் உட்கட்சிப் பிரச்சனை குறித்தும் நாங்கள் பேச தயாராக இல்லை.
முதல்வர் வேட்பாளருக்கும், துணை முதல்வர் வேட்பாளருக்கும். அவர்களே போட்டியிட்டால் பா.ஜ.க ஏற்றுக்கொள்ளுமா?
தேர்தல் என்பது கூட்டணிகள் முடிவு செய்யும் விஷயம். யாரோடு கூட்டணி என்பதை முதலில் முடிவு செய்வோம். அதன்பிறகு பார்க்கலாம். ஆனால், யார் முதல்வர் வேட்பாளர் என்பதில், எங்களுக்கு ஒரு பிரச்சனையும் வராது.
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், அ.தி.மு.க அவரிடம் சென்றுவிடும் என்று சொல்லப்படுகிறதே?
சசிகலா எப்போது வெளியில் வருவார் என்பது எனக்கு தெரியாது. அப்படியே, வந்தாலும் அதுகுறித்து அ.தி.மு.கதான் கவலைப்பட வேண்டும். சசிகலாவை சேர்க்கிறார்களா? தினகரனை சேர்க்கிறார்களா? என்பதெல்லாம் அவர்கள் முடிவு. நாங்கள் ஏன் கவலைப்படவேண்டும்?
உங்கள் கட்சியின் வி.பி துரைசாமி பாஜக தலைமையில்தான் தேர்தல் என்றிருக்கிறாரே?
அவர் பேசியது குறித்து நான் இன்னும் பார்க்கவில்லை. செய்தியாளர்கள் எப்படி கேள்வி கேட்டார்கள் என்பதை வைத்துதான் நான் கருத்துக்கூற முடியும்.
- வினி சர்பனா