சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டு தடைக்குப் பின், மீண்டும் இந்தாண்டு ஐ.பி.எல். போட்டிகளில் கர்ஜனையுடன் களமிறங்குகிறது. 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஐ.பி.எல். வரை ஒன்று மட்டும் மாறவில்லை, அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவி. ஆம், இந்தாண்டு "நம்ம தல" மகேந்திர சிங் தோனிதான் சி.எஸ்.கே.வின் கேப்டன். சி.எஸ்.கே. அணிக்காக 2010, 2011 ஆம் ஆண்டில் ஐ.பி.எல். கோப்பையை வென்றுக் கொடுத்தவர் தோனி. அதேபோல, சி.எஸ்.கே. அணி எப்போதும் லீக் சுற்றோடு வெளியேறியதில்லை. "பிளே ஆஃப்", அரையிறுதி, இறுதிப்போட்டிகள் வரை முன்னேறியுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் தோனி. கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு என்றாலும், பல முக்கியமான போட்டிகளில் தோனியின் சாதூர்யமான அதிரடி ஆட்டத்தினால் பல வெற்றிகளை பெற்றுள்ளது. இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் தோனியின் டாப் 5 ஆட்டங்களை பார்க்கலாம்.
கதறிய பெங்களூர்
2011 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்காக முதலில் பேட்டங்களில் களமிறங்கிய சி.எஸ்.கே. 6 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டிருந்தது. அப்போது சாஹாவுடன் ஆடுகளத்தில் இறங்கிய தோனி ஆடிய ஆட்டம் விஸ்வரூபம் 40 பந்துகளில் 70 ரன்களை விளாசினார். அதில் 3 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என ஸ்டேடியமே கதகளி ஆடியது. இறுதியாக இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணி வெற்றிப்பெற்றாலும், தோனி ரசிகர்களுக்கு இந்தப் போட்டி மறக்க முடியாதது.
விரட்டி விரட்டி அடி
தோனியின் பெஸ்ட் என்றால் இதைக் கூறலாம். ஆனால், இது சாம்பியன்ஸ் லீக் போட்டிக்காக தோனி ஆடிய ருத்ரதாண்டவம். சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 14 ஆவது ஓவரில் களமிறங்கிய தோனி, 19 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிக்ஸர்கள் பறந்தது. 16 பந்துகளில் 50 ரன்களை தெறிக்கவிட்டு புதிய சாதனையை படைத்தார், இறுதியாக இந்தப் போட்டியல் 12 ரன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி வாகையை சூடியது. ஆனால், டி20 போட்டிகளில் தோனியின் "செம்மம" பேட்டிங்கில் இதுவும் ஒன்று.
போதும் தாங்க முடியாது !
சி.எஸ்.கே அணியிடம் எப்போதும் அடி வாங்குவது பெங்களுர் ராயல் சேலஞ்ஜர்ஸ் அணிக்கு வழக்கமானது. இது ஆரம்பித்தது முதல் ஐ.பி.எல். நடைபெற்ற 2008 ஆம் ஆண்டு. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் 30 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். அதில் 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார். அதுவும் உலக கிரிக்கெட் அணிகள் பயந்து நடங்கும் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் ஒரே ஓவரில் 24 ரன்கள் அடித்து துவம்சம் செய்தார். இறுதியாக 13 ரன்களில் பெங்களூர் அணியை தோற்கடித்தது சி.எஸ்.கே. தோனியின் இந்த ஆட்டம் பெங்களூருக்கு தாங்க முடியாத ரணத்தை கொடுத்தது.
"பஞ்சர்" ஆன பஞ்சாப்
2010 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமானது. இந்த லீக் போட்டியில் வெற்றிப் பெற்றால்தான், சி.எஸ்.கே. அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை. இமாச்சலபிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் இந்த முக்கியமான லீக் போட்டி நடைபெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து களமிறங்கிய சி.எஸ்.கே அணி 10 ஓவர்களில் 89 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்த நிலையில் தோனி களமிறங்கினார், அப்போது 60 பந்துகளில் 104 ரன்களை சிஎஸ்கே துரத்த வேண்டியிருந்தது. ஆனால், தோனி வழக்கம்போல் பஞ்சாபை மிரட்டினார். அதுவும் கடைசி ஓவரை இர்பான் பதான் வீச, 4 பந்துகளில் 16 ரன்களை அடித்து சி.எஸ்.கே. வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் தோனி 29 பந்துகளில் 54 ரன்களை எடுத்து, ஆக்ரோஷமாக விளையாடியது ரசிகர்களால் காலத்துக்கும் மறக்க முடியாதது.
பம்மியது மும்பை
2012 ஆம் ஆண்டு ஐ.பி.எல். எலிமினேட்டர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது.அதில் மைக்கல் ஹஸி, பத்ரினாத் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தபோது 14 ஆவது ஓவரில் தோனி பேட்டை சுழற்றிக்கொண்டு களம் கண்டார். 20 பந்துகளில் 51 ரன்களை அடித்து மும்பை இந்தியன்ஸ்க்கு தண்ணி காட்டினார். இறுதியாக 20 ஓவரில் 187 ரன்கள் விளாசிய சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது. தோனியின் இந்த இன்னிங்ஸ் ரசிகர்களாலும் மறக்க முடியாது, மும்பை இந்தியன்ஸ் அணியாலும் மறக்க முடியாது.