சிறப்புக் களம்

“இனி இங்கேயும் கல்யாணம்தான்”- வந்தாச்சு நடமாடும் திருமண மண்டபம்..!

kaleelrahman

என்னதான் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும். பாக்குவெத்தலை மாற்றி பருஷம்போட்டு பத்திரிகை அடுச்சு அங்காளி பங்காளி மாமன் மச்சான் பெரியப்பா சித்தப்பா அண்ணன் தம்பி என சொந்த பந்தங்களை அழைத்து மண்டபம் புடுச்சு மந்திரம் ஓத அக்னி சாட்சியா தாலி கட்றதுதாய்யா கல்யாணம். அப்படின்னு சொல்லி அதுக்குத்தான் நிறைய பேர் ஆசைப்படுறாங்க. ஆனா இந்த கொரோனா காலத்துல இப்படியெல்லாம் விமர்சையாக கல்யாணம் பண்ண முடியுமா என்று ஏங்குபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டதுதான் நடமாடும் திருமண மண்டபம். இந்த நடமாடும் கல்யாண மண்டபத்தை உருவாக்கி அசத்திவரும் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை சேர்ந்த ஹக்கீமிடம் பேசினோம்

உங்களுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது?

கல்யாண மண்டபத்தில் டெக்கரேஷன் போடுற வேலை செய்து வருகிறேன். கொரோனா சமூக பரவலை தடுப்பதற்காக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி திருமண நிகழ்ச்சிகளில் ஐம்பது பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாதாம். ஒருலட்சம் ரூபாய் கொடுத்து மண்டபம் பிடித்து ஐம்பது பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்றால் யார்தான் கல்யாண மண்டபம் பிடித்து திருமணத்தை நடத்துவார்கள். அதனால் கல்யாண மண்டபங்களில் கல்யாணம் நடப்பது குறைந்துள்ளது. இதனால் நாங்களும் வேலையின்றி எங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். இதனால் திருமண மண்டபங்களுக்கு மாற்றாக நடமாடும் கல்யாண மண்டபத்தை உருவாக்கியுள்ளோம்.

நடமாடும் கலயாண மண்டபம் என்றால்?


லாரியின் பின்புறத்தில் கல்யாண மண்டபத்தில் இருக்கும் மணமேடையை போல வடிவமைத்துள்ளோம். எங்களை அழைப்பவர்களின் இல்லத்திற்கு லாரியை கொண்டுச் சென்று நிறுத்தி அதன் முன்புறத்தில் பி.வி.சி ஷீட்டால்ஆன தற்காலிய குடிலை அமைப்போ. அதன் உள்ளே அரசு அறிவுறுத்தியபடி சமூக இடைவெளியோடு ஐம்பது இருக்கைகள் மட்டுமே போடுவோம். அதேபோல உள்ளே வருபவர்களை காய்ச்சல் கண்டறியும் கருவிமூலம் சோதனை செய்தபிறகு கிருமிநாசினி (சானிடைசர்) கொடுத்து கைகளை கழுவச் சொல்வோம். அதன்பிறகு முகக்கவசம் கொடுப்போம். இப்படியாக முழுக்க முழுக்க அரசின் விதிமுறைகளை பின்பற்றுகிறோம். அதேபோல ஐம்பதுபேருக்கு மட்டும்தான் அனுமதி. அதற்குமேல் யார் வந்தாலும் அனுமதிக்கவும் மாட்டோம். ஆர்டரும் எடுக்க மாட்டோம்.

நடமாடும் கல்யாண மண்டபத்தில் உள்ள வசதிகள் என்னென்ன?


கல்யாண மண்டபத்தில் இருப்பதுபோன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய மணமேடை. பின்புறத் திரை. லைட் சவுண்ட் சிஸ்டம், கீழே கார்பெட் விரிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பப்பே முறையில் சைவ அசைவ உணவு வகைகளை ஏற்பாடு செய்து தருகிறோம். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி முதலிலேயே கிருமிநாசினி தெளித்துவிடுவோம். பாதுகாப்போடும் திருமண மண்டபத்திற்கு வந்துசென்ற திருப்தியோடும் குறைந்த செலவில் அமைத்துக் கொடுக்கிறோம்.