egg
egg google
சிறப்புக் களம்

ம.பி.: திறந்த வெளியில் இறைச்சி, முட்டைகளை விற்பனை செய்ய தடை - முதல்வர் மோகன் யாதவ் தொடக்கமே சர்ச்சை!

Jayashree A

மத்திய பிரதேசத்தில் இறைச்சி மற்றும் முட்டைகளை திறந்த வெளியில் விற்பதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

தடையை அமல்படுத்த உணவுத்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இறைச்சி

போபால் மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக மோகன்யாதவ் போபாலில் உள்ள மோதிலால் நேரு மைதானத்தில் புதன்கிழமை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் மங்குபாய் சி.படேல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து இரு துணை முதல்வர்கள் ஜெகதீஷ் தேவ்தா மற்றும் ராஜேந்திர சுக்லா ஆகியோரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்த மோகன் யாதவ், தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகளை எடுத்தார். அதில், திறந்த வெளியில் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதற்கும் தடை விதித்தார். மேலும் உத்தரவை மீறி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

தடையை அமல்படுத்துவதற்கு முன்னதாக திறந்தவெளியில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனை செய்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அம்மாநில அரசாங்கம் பிரசாரத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த பிரச்சாரமானது டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை மேற்கொள்ளப்படுவதாக மோகன் யாதவ் கூறியதாக தெரியவருகிறது.