சிறப்புக் களம்

பெண்ணின் உளவியலை அப்படியே சொன்ன படமா லஷ்மி?

பெண்ணின் உளவியலை அப்படியே சொன்ன படமா லஷ்மி?

webteam

லஷ்மி....வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறாள்.. இந்த குறும்படத்தின் ஓபனிங், பல விருதுகள் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. 

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பட்டியலிட்டு மலைப்பை ஏற்படுத்தும் இந்த குறும்படம் பற்றி பேசிப்பேசி மாய்கிறார்கள் வலைதளவாசிகள்.. 

சிலர் கொண்டாடுகிறார்கள். சிலர் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். 

விமர்சனங்களை ஒதுக்கிவைத்துவிட்டு குறும்படத்தை உற்றுநோக்கினால், படத்தில் சுட்டிக்காட்டப்படும் மிடில் கிளாஸ் குடும்பப் பெண்ணின் உளவியலை புரிந்து கொண்டுதான் படம் உருவாக்கப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.. 

ஆண்டாண்டு காலமாக அத்தனை குடும்பங்களிலும் அதிகாலையில் குக்கர்கள் சப்தம் எழுப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.. கலவியும் குழந்தைகள் அறியா கள்ளத்தனத்துடன் ஒண்டுக்குடித்தனங்களில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. பெண்களை திருப்திபடுத்துவதில் பெரும்பாலான ஆண்கள், அறிந்தோ, அறியாமலோ  தோற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  

ஆனால் உடல்சார்ந்து மட்டுமே உறவுகள் கட்டமைக்கப்படுவதில்லை.. உடல் தேவை மட்டுமே பெண்களை திருப்திபடுத்துவதும் இல்லை. இதனை புரிந்த ஆண்கள் எத்தனை பேர்? இந்த புரிதலை லஷ்மி குறும்படம் கொண்டிருக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்லலாம். 

அதே வீடு, அதே வேலை, அதே சூழல், குடும்ப வாழ்வில் விரக்தி எனில் பிற ஆண்களிடம் மனம் சென்றுவிடும் என்பதுதான் படம் சொல்கிறதா? அதுவும் ரயிலில் தினமும் பார்க்கும் முகம் என்றால் ஈர்ப்பு வேண்டுமானால் சாத்தியமாகலாம்.. முதல் பேச்சிலேயே அவனுடன் சென்றுவிடும் அளவுக்கு பலவீனமானவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்?
 
வீட்டிலும், வெளியிலும் வேலை பார்ப்பதை பெண்கள், விரும்பி ஏற்கும் சுமையாக கொண்டிருக்கிறார்கள். அல்லது வேறு வழியின்றி சகித்துக் கொள்கிறார்கள். அதற்காக வேலைக்கு வெளியே புறப்படும் பெண்களை சந்தேகத்துடன்  பார்க்க வைக்கிறதா இந்த குறும்படம்? தங்கள் சுய மரியாதைக்காகவும், தன்காலில் நிற்கும் பொருளாதார சுதந்திரத்திற்காகவும் வேலைக்குச் செல்லும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். செய்யும் வேலையின் மீதான விருப்பத்திற்காக அர்ப்பணிப்போடும், தங்களுக்கான அங்கீகாரத்திற்காகவும் போராடும் பெண்கள்  பலர் இருக்கிறார்கள்.. 

வீட்டுப்படியை தாண்டவிடாமல் பெண்களை கட்டுப்பெட்டியாக வைத்திருந்த காலக்கட்டங்களின் சங்கிலிகளில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவே பல ஆண்டு போராட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த படம் சொல்ல வருவது என்ன? எல்லோரும் கேட்கும் கேள்விதான்.. ஆணும் பெண்ணும் நட்பாகவே பழக முடியாதா? கணவரோ, குடும்பத்தினரோ அல்லாத ஒரு ஆணுடன் பேசினால் அந்த உறவு நட்பாக நீடிக்க முடியாதா என்ன? ஒரு ஆண், மனைவி அல்லா வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருப்பதை சமூகம் எளிதாக கடந்துவிடுவதைப்போலத்தான் குறும்படத்தின் காட்சிகளும் அதனை எளிதாக கடந்துவிட்டு, லஷ்மியின் உறவை உறுத்த வைத்திருக்கிறது. 

ரயிலில் கதிர் என்றால்.. பேருந்தில் யார் என்ற கள்ளத்தனத்தை மறைத்து கூறுகிறதா குறும்படம்? 

அதற்கு பெண்ணுரிமையை போற்றிய மகாகவி பாரதியின் பாடல்களை துணைக்கழைத்து நோகடித்திருக்கிறது இந்த படம். . 

பெண்ணறம் படுக்கை கசங்கலில் இல்லை.. நிமிர்ந்த நன்னடையும், ஞானச்செருக்கும் இருட்டறைகளில் இல்லை. 

பெண்களின் மனதை புரிந்துகொள்ள இன்னும் உங்களுக்கு எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும்?