சிறப்புக் களம்

ஷமி மீது கிரிமினல் வழக்கு

ஷமி மீது கிரிமினல் வழக்கு

webteam

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. அவர் மீது கடந்த சில நாட்களாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவரது மனைவி தற்போது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஜவட்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷமியின் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 498A  (கணவன் அல்லது உறவினர்களால் ஒரு பெண்ணுக்கு கொடுமை செய்யப்படுவது), 307 (கொலை முயற்சி), 323 (காயம் ஏற்படுத்தும் வகையில் தண்டனை அளித்தல்), 376(கற்பழிப்பு), 506 (குற்றவியல் அச்சுறுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னணி

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் முகமது ஷமி குறித்து அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பிருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழிப்பதாகவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார். பெண்களின் புகைப்படங்கள் மற்றும் மொபைல் எண்களை அவர் பதிவிட்டுள்ளார். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களுடன் ஷமி இருக்கும் புகைப்படங்கள் உள்ளன. அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தில் இவர் பாகிஸ்தான் விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் இவருடனும் ஷமி தொடர்பில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில் ஷமியுடன் ஒரு இளம்பெண் உரையாடுவது போல் உள்ளது. அதில் நீ எங்கு இருக்கிறாய் உன்னை பார்க்க வேண்டும். நீ எப்போது பெங்களூரு வருவாய் என அந்த குறுஞ்செய்தி நீண்டுக்கொண்டே செல்கிறது.முதலில் இந்தப் பதிவுகளை எல்லாம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சற்று அதிர்ச்சியுடனே பார்த்தனர். ஒருவேளை ஹசின் ஜகானின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என எண்ணினர். ஷமிக்கு இருக்கும் நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டிருக்கலாம் என்றே பேசப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஹசின் ஜகான், தனது கணவர் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை அளித்தார்

அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவதூறாக பேசுவதாகும் கூறினார். மேலும் தன்னை அவர்கள் கொலை செய்ய முயற்சிக்கின்றனர் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்து இந்தியா திரும்பிய ஷமி தன்னை தாக்கினார். அவரின் நடத்தையை மாற்றிக்கொள்ளுமாறு பல்வேறு முறை அவரிடம் தெரிவித்துள்ளேன். அவருக்கு அவகாசங்கள் அளிக்கப்பட்டுவிட்டன. ஷமி ஒவ்வொரு முறை என்னை துன்புறுத்தும் போது எனது குடும்பத்துக்காகவும் எனது குழந்தைக்காகவும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன். ஆனால் இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. இதுதொடர்பாக சட்ட ரீதியாக புகார் அளிக்க உள்ளேன் என்றார்.