சிறப்புக் களம்

இளம் வயதிலேயே மூட்டுப்பிரச்னைகள்...குணப்படுத்த வாய்ப்பிருக்கா? மருத்துவர் சொல்லும் அறிவுரை

webteam

முதியவர்கள் மட்டுமல்ல இளைஞர்களும் கூட அண்மைக்காலமாக அதிகளவில் ஆர்த்ரைட்டீஸ் (ARTHRITIS) எனும் மூட்டு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக மூட்டு நோய் தினமான இன்று (அக்டோபர் 12) இதுபற்றி அறிவோம்.

மனிதனின் ஒட்டுமொத்த உடல் எடையை தாங்கவும், சிறுசிறு அசைவுகளுக்கும் மூட்டுகள் மிகமிக அவசியம். மூட்டுகளில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய வேலைகள் அனைத்தும் முடங்கி விடும்.

உலகெங்கும் பல கோடி மக்கள் மூட்டழற்சி, முடக்கு வாதம், கீல் வாதம் போன்ற பல்வேறு விதமான மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மூட்டு நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் நாள் உலக மூட்டு நோய் தினமாக கடைப்பிடிக்கிறது.

முன்பெல்லாம் மூட்டுவலி என்றாலே வயது முதிர்வின் போது தான் வரக்கூடியது என கருதப்பட்டது. தற்போது மாறிவிட்ட வாழ்க்கை சூழலில் 20 முதல் 25 வயதிலேயே பலரும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர்.

இந்தியாவில் சுமார் 18 கோடி பேர் மூட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூட்டு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவரை அணுகினால் எளிதில் குணப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர் ஸ்ரீராம் தணிகை.

மூட்டு நோய்களுக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தரமான சிகிச்சைகள் உள்ளதால் நோயாளிகள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் மருத்துவர் ஸ்ரீராம் தணிகை தெரிவித்தார். ஆண்களைவிட, அதிகமாகப் பெண்களே மூட்டு நோயால் பாதிக்கப்படுகிறார்கள் எனவும், அதனால் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்படுகின்றனர்.