பயம் என்ற உணர்வு அவசியமா இல்லையா? பயம் நார்மலா இல்லையா? பயம் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் மனநல மருத்துவரான சிவபாலன்.
இந்த காலத்தில் மக்கள் அனைவருக்கும் பயம் இருக்கிறது. கொரோனா வந்துவிடுமோ என்று எல்லோரும் பயப்படுகிறார்கள். எப்போதும் பயத்தோடும், பீதியோடும் மக்கள் இருக்கிறார்கள். இந்த பயத்தை எப்படி போக்குவது? என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள்.
அதேபோல மக்கள் கொரோனா தொடர்பான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அலட்சியப்படுத்துகிறார்கள், ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே வருகிறார்கள், முகக்கவசம் அணிவதில்லை, தனி மனித இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது மக்களுக்கு நோய் குறித்த பயமே இல்லையா என்று தோன்றுகிறது. மக்களுக்கு எப்படி பயத்தை வரவைப்பது எனவும் சில பேர் கேட்கிறார்கள்.
உண்மையில் பயம் அவசியமா இல்லையா? பயம் நார்மலா இல்லையா?
பயம் மட்டும் அல்ல, நமது எந்த ஒரு உணர்வும் நார்மலானதுதான் மற்றும் அவசியமானது தான். சந்தோஷம், துக்கம், கவலை, வருத்தம், பயம், பதட்டம், குழப்பம், சந்தேகம் என அத்தனையும் சில சந்தர்ப்ப சூழல்களில் மிக அவசியமானவைகளே. அதனால் எந்த ஒரு உணர்வையும் தேவையற்றது என ஒதுக்க முடியாது.
உதாரணத்திற்கு நாளை ஒரு முக்கியமான தேர்வு இருக்கிறதென்றால் அது தொடர்பான ஒரு பயம் இருந்தால் மட்டுமே அதற்காக நாம் நம்மை தயார் செய்து கொள்ள முடியும். அந்த பயம் இல்லையென்றால் நாம் தேர்வை பற்றியே கவலையில்லாமல் அதற்காக தயார் செய்ய வேண்டும் என்ற அக்கைறையில்லாமல் இருப்போம். வீட்டில் கூட “நாளைக்கு எக்சாம் இருக்கு என்னடா இப்படி பயம் இல்லாம சுத்திட்டு இருக்க” என்று நம்மை திட்டுவதை பார்த்திருப்போம்.
பயம் என்பது ஒரு உயிரினத்திற்கு தேவையான ஒரு உணர்வே. ஏன் தேவை என்றால் ஒரு நெருக்கடியை நாம் சந்திக்கும்போது அதை எதிர்கொள்ள மன ரீதியான தூண்டலுக்கும், உடல் ரீதியான ஆற்றலுக்கும் இந்த உணர்வு அவசியமானது. அப்படியென்றால் பயப்படுவது எல்லா நேரமும் அவசியமானதா என்றால் நிச்சயம் இல்லை. பயத்தில் இரண்டு வகைகள் இருக்கின்றன: Constructive Fear, Destructive Fear.
திடீரென ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள ஆக்கப்பூர்வமாக செயல்களையும், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான தூண்டுதல்களை தருவது Constructive fear. அது ஆக்கப்பூர்வமானது, அந்த பயம் அவசியமானது. கொரோனா நோய் வந்துவிடும் என்ற அச்சத்தின் விளைவாக முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கை கழுவது போன்றவையெல்லாம் Constructive fear விளைவாக வருவது.
இயல்பாக எழும் பயம் நெருக்கடியில் இருந்து காப்பாற்றுவதற்கு பதிலாக அதுவே பல நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அதன் விளைவாக நமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டால் அதுவே நமக்கு ஆபத்தாக மாறினால் அது Destructive fear. கொரோனா வந்து விடுமோ என பயந்து யாரையும் பார்க்காமல், யாரிடமும் பேசாமல், அத்தியாவசிய தேவைகளை கூட பார்த்துக்கொள்ளாமல், சாப்பிடாமல், தூங்காமல், வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்தால், எப்போதும் அதே கவலையாக அதே நினைவாக இருந்து கொண்டு இறுதியில் தற்கொலை வரை சென்றால் அது Destructive fear.
நமது பயம் constructive ஆக தான் அதாவது ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டுமே தவிர Destructive fear ஆக அதாவது அழிவுப்பூர்வமானதாக இருக்கக்கூடாது. பயம் மட்டுமல்ல நமது அத்தனை உணர்வுகளும் ஆக்கப்பூர்வமானதாகவே இருக்க வேண்டும். நமது உணர்வுகளின் தேவையே அது தான், எப்போது நமது உணர்வுகள் ஆக்கப்பூர்வமான பாதையில் இருந்து விலகி அழிவுப்பாதையில் செல்ல தொடங்குகிறதோ உடனடியாக நாம் அப்போது விழித்துக்கொண்டு சக மனிதர்களின் உதவியை கோரலாம்.
வேறு யாரையும் விட நமது உணர்வுகளை நம்மால் விரைவாக உணர முடியும், அதனால் அப்படிப்பட்ட உணர்வுகள் இருந்தால் உடனடியாக உதவியை கோருவது அத்தியாவசியமானது. நமது உடலில் ஏற்படும் சிறு வலியை உடனடியாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் நாம், மனம் மிக மோசமாக காயமடையும் நேரத்தில் கூட அதை யாரிடமும் பகிராமல் ரகசியமாக நமக்குள்ளே பூட்டிவைத்துக்கொள்கிறோம்.
உண்மையில் மனதின் பிரச்சனைகளை தான் நாம் உடனடியாக பகிர வேண்டும் ஏனென்றால் நம்மை நம்மால் முழுமையாக பார்த்துக்கொள்ள முடியாத தருணம் அது.’’ என்கிறார் அவர்.