சிறப்புக் களம்

காதல்.. கல்யாணம்.. பிரிவு.. கொலை.. அஷ்வினிக்கு நடந்தது என்ன?

Rasus

சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம். படித்து வரும் மாணவி அஷ்வினி. மாணவி இன்றைய வகுப்புகள் முடிந்து வீடு திரும்ப கல்லூரி வாசலுக்கு வந்தபோது அஷ்வினியை இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவியை பொதுமக்கள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அஷ்வினிக்கு அழகேசன் பலமுறை காதல் தொல்லை கொடுத்ததாகவும், ஆனால் அழகேசனின் காதலை அஷ்வினி ஏற்க மறுத்ததால் ஆத்திரத்தில் அவரை கொடூரமாக கொலை செய்ததாகவும் முதலில் கூறப்பட்ட நிலையில் கொலைக்கான திடுக்கிடும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

திடுக்கிடும் தகவல்

மாணவி அஷ்வினியும், அழகேசனும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர்கள். 18 வயதான அஷ்வினி கல்லூரி முதலாமாண்டு பி.காம் படித்து வருகிறார். அழகேசன் மதுரவாயல் பகுதியில் வீட்டிற்கு வீடு தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வந்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் மலரவே அஷ்வினி விருப்பப்பட்டு அழகேசனை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம்தான் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் முடித்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் திருமணத்தை விரும்பாத பெற்றோர் மதுரவாயல் போலீசாரிடம் புகார் கொடுத்திருக்கின்றனர். அதன்பேரில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அஷ்வினி- அழகேசன் பிரிந்துள்ளனர். ஆனால் அஷ்வினியின் பிரிவை ஏற்க முடியாமல் அழகேசன் தவித்திருக்கிறார். இதனால் அடிக்கடி அஷ்வினியை பின்தொடர்வது, போன் செய்வது என பல தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அஷ்வினி, அழகேசன் மீது மதுரவாயல் போலீசாரிடம் புகார் தெரிவிக்க அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, பிரச்னையிலிருந்து விடுபட, தனது படிப்பை நல்ல முறையில் தொடர அஷ்வினி ஜாபர்கான்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்திருக்கிறார். இந்நிலையில் இன்று கல்லூரிக்கு வந்த அழகேசன், அஷ்வினி வீடு திரும்ப கல்லூரி வாசல் வந்தபோதுதான் மறைத்து கொண்டு வந்த கத்தியால் அஷ்வினியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலை செய்த அழகேசனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் அவரும் சுய நினைவை இழந்துள்ள நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. போலீசார் அவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அஷ்வினியின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அஷ்வினியும், அழகேசனும் விரும்பி திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் எதற்காக அவர்கள் பிரிந்தனர்..? அல்லது பிரிக்கப்பட்டனரா..? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. கே.கே.நகர் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.