சீனாவின் சவாலைச் சமாளிக்கும் வகையில் அணுஆயுதங்களைப் புதுப்பிக்கும் பணிகளில் இந்தியா இறங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இணையதளம் ஒன்றில் அமெரிக்காவின் முன்னணி அணுஆயுத வல்லுனர்களான ஹன்ஸ் எம்.கிறிஸ்டென்சன் மற்றும் ராபெர்ட் எஸ்.நோரிஸ் ஆகியோர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், பொதுவாக பாகிஸ்தானைக் கருத்தில் கொண்டே இந்தியாவின் அணுஆயுத தயாரிப்புகள் மற்றும் ஆயுத பலத்தைப் பெருக்கும் நடவடிக்கைகள் இருக்கும். ஆனால், அந்த நிலை தற்போது மாறி, சீனாவையும், அதன் அணுஆயுதக் கொள்கைகளையும் கருத்தில் கொண்டு இந்தியா, தனது ஆயுதங்களை புதுப்பிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தென்னிந்தியாவிலிருந்து சீனாவின் எந்தவொரு பகுதியையும் தாக்கி அழிக்கும் வகையிலான ஆயுதங்களை உருவாக்குவதில் இந்தியா முனைப்பு காட்டி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 150 முதல் 200 அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் வகையில் 600 கிலோ புளுட்டோனியத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே உள்ள அக்னி-1 ஏவுகணைகளை 2,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் வல்லமை பெற்றதாக மேம்படுத்துவதில் இந்தியா அக்கறை காட்டி வருவதாகவும், இதன்மூலம் சீனாவின் மேற்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை தாக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், வானில் இருந்து தாக்கக் கூடிய 2 ஏவுகணைகள், தரையில் இருந்து மேலெழும்பி தாக்கக் கூடிய திறன்பெற்ற 4 ஏவுகணைகள் மற்றும் கடலில் இருந்து தாக்கவல்ல ஒரு ஏவுகணையையும் இந்தியா வடிவமைத்து வருவதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல வடகிழக்கு இந்தியாவிலிருந்து சீனாவின் அனைத்து பகுதியையும் தாக்குவகையில் அக்னி -4 ஏவுகணையை இந்தியா உருவாக்க இருக்கிறது. மேலும், 5,000 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையிலான அக்னி-5 ஏவுகணை உருவாக்கத்திலும் இந்தியா ஈடுபாடு காட்டிவருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் தென் மற்றும் மத்திய பகுதியிலிருந்து கூட சீனாவிலுள்ள எந்தவொரு பகுதியையும் தாக்கி அழிக்க முடியும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.