கோயம்புத்தூரை பூர்விகமாகக் கொண்ட கனிமொழி மனோகரன், சென்னையைச் சேர்ந்த அரவிந்த்ராஜ் காதலர் ஜோடியின் நிச்சயதார்த்த மோதிரம்தான் நேற்று முன் தினம் சமூகவலைதளங்களில் பேசுபொருள். காரணம் மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்த திருக்குறள்.
கனிமொழி நிச்சயதார்த்த மோதிரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே மோதிரம் வைரலாகத் தொடங்கியதோடு, வாழ்த்துக்களும் குவிந்தன. எவ்வளவோ விஷயங்கள் இருப்பினும் திறக்குறளை மோதிரத்தில் பொறித்தற்கான காரணத்தை அவரைத் தொடர்பு கொண்டே கேட்டோம்.
அவர் கூறும் போது, “ விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே எனக்கு பெரியாரின் கருத்து மீது அதிக ஈர்ப்பு இருந்தது. பேஸ்புக்கில் அறிமுகமான எனது காதல் இணையர் அரவிந்த் ராஜ்ஜூக்கும் அதே நிலைப்பாடு இருந்தது. அதுதான் நாங்கள் அறிமுகமானதற்கு காரணம். அதனைத்தொடர்ந்து ஒரு வருடமாக பழகி வந்த நாங்கள், திருமணம் செய்ய முடிவெடுத்தோம். எங்களது திருமணம் சாதிமறுப்பு திருமணம்தான்.
மோதிரத்தில் திருக்குறளை பதிவு செய்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தற்போதைய அரசியல் சூழல். இன்னொன்று, எனது தோழி ஒருவர் அவரது திருமணத்தின் போது தாலியில் திருக்குறளை பொறித்திருந்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதே போன்று நாங்களும் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அத்துடன் அது ’பிறப்பால் அனைவரும் சமம்’ என்ற கருத்தையும் ஆழமாக உணர்த்த வேண்டும் என்று விரும்பினோம். அதன் விளைவுதான் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை நிச்சயதார்த்த மோதிரத்தில் பதிவு செய்ததிற்கான காரணம்.
இதற்காக முதலில் பெரிய தங்கநகைகடைகளுக்கெல்லாம் ஏறி இறங்கினோம். அவர்கள் இதற்கு அதிக காலம் பிடிக்கும், செய்வது கடினம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை அடுக்கினர். அதன் பின்னர் கோவை அருகே நகை செய்து விற்கும் ஒரு வியாபாரியிடம் சென்று இது குறித்து கூறினோம்.
அதற்காக நானே வடிவமைத்த டிசைனை அவரிடம் கொடுத்தேன். அவர், மோதிரத்தை தயார் செய்து, அதில் லேசர் மூலம் நான் கொடுத்த டிசைனை வடிவமைத்து தந்தார். இறுதியில் அதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களும் மோதிரம் மிகவும் பிடித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து தான் நான் மோதிரத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பும் வாழ்த்துக்களும் எங்களது குடும்பத்தை ஆச்சரியப்பட வைத்தது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் நான் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்க வில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தாலி சடங்கை தவிர்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கிறது.” என்றார்.
- கல்யாணி பாண்டியன்