தமிழக அரசியலை ஆட்டிப் படைத்துவரும் குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை அனுப்பிய ஆவணம் காணாமல் போனதாக கூறப்பட்டதிலிருந்து இன்று வரை சர்ச்சை முடிவுக்கு வந்த பாடில்லை.
தமிழ்நாட்டில் போதைப் பாக்கு, மாவா எனப்படும் புகையிலை ஆகியவற்றைத் தயாரிக்க, விற்பனை செய்ய 2013 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதன்பின், கடைகளில் இந்தப் பொருட்கள் உள்ளதா என காவல்துறையால் சோதனை செய்யப்பட்டாலும், இவை பரவலாகக் கிடைத்து வந்ததை எவரும் மறுக்க முடியாது.
இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தயாரிப்பு ஆலைகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில், அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததும், கணக்கில் காட்டாமல் 500 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்திருப்பதும் தெரிய வந்தது. அப்போது சிக்கிய ஒரு டைரியில், பான் மசாலாப் பொருட்களை விற்க காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாதந்தோறும் 14 லட்சம் ரூபாய் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இதுபற்றிய ஆதாரங்களை தமிழக அரசுக்கு அனுப்பிய வருமான வரித்துறை, புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தது. அந்த சமயத்தில் சென்னை காவல் ஆணையராக இருந்த ஜார்ஜ், உள்துறைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத பான் மசாலா தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றில் போலீசாருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறியிருந்தார்.
இத்தகைய சூழலில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், வருமான வரித்துறை அனுப்பிய ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனக்கூறி தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதன் பின் வருமான வரித்துறையினர் அனுப்பிய ஆதாரங்கள் தலைமைச் செயலகத்தில் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, பான் மசாலாப் பொருட்கள் விவகாரம் சட்டப்பேரவையில் எதிரொலித்தது.
இந்தப் பிரச்னையை சட்டப்பேரவையில் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சென்னையில் மாவாவும், குட்காவும் எளிதில் கிடைப்பதாகக் கூறி சில பொட்டலங்களையும் காட்டினார். இத்தகைய சூழலில், குட்கா நிறுவனங்களில் லஞ்சம் பெற்ற புகாரில் சிக்கிய டிஜிபி ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு ஆணை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, டிஜிபி ராஜேந்திரனுக்கு எதிரான புகாரில் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனிடையே, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பெட்டிக்கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பான் மசாலாப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இத்தகைய சூழலில், குட்கா விவகாரம் தொடர்பான வழக்கில் கருத்துத் தெரிவித்த உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என்று கூறியுள்ளது.