சிறப்புக் களம்

சர்ப்ரைஸ் தேர்வு.. குஜராத்தின் புதிய முதலமைச்சர் ஆகும் பூபேந்திர படேல்! யார் இவர்?

EllusamyKarthik

குஜராத் மாநில அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது ஆளும் பாரதிய ஜனதா கட்சி. முதலமைச்சராக பதவி வகித்து வந்த விஜய் ரூபானி ராஜினாமாவை தொடர்ந்து அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் 59 வயதான பூபேந்திர பட்டேலை அந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்துள்ளது பாஜக தலைமை. 

அடுத்த முதல்வருக்கான ரேஸில் இவரது பெயர் இல்லாத நிலையில், தற்போது முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக துணை முதல்வர் நித்தின் பட்டேல், விவசாய துறை அமைச்சர் RC Faldu, மத்திய அமைச்சர்கள் புருஷோத்தம் ரூபாலா, மன்ஷூக் மண்டாவியா மாதியானவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

யார் இவர்?

குஜராத்தின் நிர்வாக தலைநகரான அகமதாபாத் நகரில் கடந்த 1962 ஜூலை 15-இல் பிறந்தவர் பூபேந்திர பட்டேல். இவரது முழு பெயர் பூபேந்திர ரஜினிகாந்த் பட்டேல். சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்துள்ளார். கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டு என்றால் அவருக்கு கொள்ள இஷ்டம். குஜராத் மாநிலத்தில் செல்வாக்கு மிக்கதாக கருதப்படும் பட்டிதார் சமூகத்தை சார்ந்தவர் இவர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர். 2017 தேர்தலுக்கான வேட்பாளர் பிரமாணத்தில் ஐந்து கோடி ரூபாய் சொத்துகளை கைவசம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

அரசியல் என்ட்ரி!

கடந்த 2017 குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் முன்னாள் மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேல் போட்டியிட்டு வென்ற Ghatlodiya தொகுதியில் போட்டியிட்டு 1.17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சஷிகாந்த் பட்டேலை வென்றிருந்தார். அப்போது முதல் சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். 

அதற்கு முன்னதாக அகமதாபாத் நகராட்சியின் Thaltej வார்டு உறுப்பினர், அகமதாபாத் நகர வளர்ச்சிக் கழக சேர்மேனாகவும் அவர் பணியாற்றி உள்ளார்.  

இவர் நியமிக்கப்பட காரணம் என்ன?

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பூபேந்திர பட்டேலுக்கு முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சுமார் கால் நூற்றாண்டுக்கு மேலாக பாஜக குஜராத் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. அதை தக்கவைத்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதற்கு மத்தியில் குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்து பூபேந்திர பட்டேல் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நாளை மதியம் அவர் பதவி ஏற்றுக் கொள்வார் என சொல்லப்பட்டுள்ளது.